சென்னை : 2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடக்க உள்ளது. அதற்கான விதிமுறைகளை பிசிசிஐ தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்க வைக்கலாம் என்ற விதி இருந்தது. ஆனால், ரைட் டூ மேட்ச் (Right to match) என்ற விதி இல்லை.
இந்த ஆண்டு ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். ஒரு வீரரை ரைட் டூ மேட்ச் பயன்படுத்தி வேறு அணி ஏலத்தில் வாங்கிய பின் அதே ஏலத் தொகைக்கு அவரை தங்கள் அணிக்கு திரும்ப கொண்டு வரலாம்.

அந்த வகையில் 4 முக்கிய வீரர்களை தக்க வைத்துக் கொள்ள விரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, தோனியை தக்க வைத்துக் கொள்வது குறித்து குழப்பம் நிலவுகிறது.
தோனியை தக்க வைத்துக் கொள்வதில் உள்ள சிக்கல்கள் என்ன? என்று பார்க்கலாம். தோனிக்கு தற்போது 42 வயது ஆகிறது. அடுத்த ஆண்டு அவர் முழு வீச்சில் விளையாடுவது, குறிப்பாக பேட்டிங் செய்வது சந்தேகத்திற்குரியது. மேலும், தோனிக்கு தற்போது 12 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது. இது அணியின் ஒட்டுமொத்த வீரர்களின் சம்பள செலவினத் தொகையில் சிக்கலை ஏற்படுத்தும்.
ஒரு அணி 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றால் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதிஷா பதிரானா ஆகியோரை சிஎஸ்கே நிச்சயம் தக்க வைத்துக் கொள்ளும். 4வது வீரராக ரைட் டூ மேட்ச் பயன்படுத்தி சிவம் துபேவை ஏலத்தில் அந்த அணி வாங்கக் கூடும். தற்போது தோனியை அணியில் தக்க வைத்தால் ஜடேஜா, சிவம் துபே அல்லது பதிரானா ஆகியோரில் ஒருவரை ஏலத்தில் விட்டு விட்டு மீண்டும் போட்டி போட்டு வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
சிவம் துபே, மதீஷா பதிரானா போன்ற வீரர்களை ஏலத்தில் விட்டால் அவர்களுக்கு 15 கோடிக்கும் அதிகமாக ஏலத் தொகை செல்லும். இந்த நிலையில் அவர்களுக்கு பதில் தோனியை ஏலத்தில் விட்டால் மற்ற நான்கு முக்கிய வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.
ஆனால், தோனியை விடுவித்தால், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் போன்ற அணிகள் அவரை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யலாம். அந்த அணிகளுக்கு அதிக ரசிகர் கூட்டம் இல்லை என்பதால் தோனியை தங்கள் அணிக்கு வாங்க முயற்சி செய்யும். இதனால், சிஎஸ்கே அணி ரைட் டூ மேட்ச் அல்லது நேரடி ஏலத்தில் அதிக விலை கொடுத்து மீண்டும் வாங்க வேண்டியிருக்கும். தோனி ஏலத்தில் குறைந்த விலைக்கு போனால் மட்டுமே, ரைட் டு மேட்ச் மூலம் வாங்குவது சிஎஸ்கே அணிக்கு லாபகரமாக இருக்கும்.
தோனியை தக்க வைத்தால் சிவம் துபே, பதிரானா போன்ற வீரர்களை ஏலத்தில் அதிக தொகை கொடுத்து சிஎஸ்கே அணி வாங்க நேரிடும். 2025 ஐபிஎல் ஏலம் மற்றும் விதிமுறைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதன் பின் இது குறித்த அதிகரப்ப்பூர்வ தகவல்கள் வெளி வரலாம்.