சென்னை: கிரிக்கெட் என்பது இந்தியாவில் ஒரு மதம் போலவே இருக்கின்றது. ரசிகர்கள் கிரிக்கெட்டை உயிருக்கும் மேலாக நேசித்து வருகிறார்கள். அதிலும் சென்னை ரசிகர்கள் என்றால், உண்மையிலேயே கிரிக்கெட்டுக்கு உயிரையே கொடுப்பார்கள். பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தும் மனப்பக்குவம் உள்ள சென்னை ரசிகர்களுக்கு, நமது அணி மீது எவ்வளவு பாசமும் மரியாதையும் இருந்திருக்கும்!
ஆனால், அப்படிப்பட்ட அணி வேண்டுமென்றே ஒரே தவறைத் தொடர்ந்து செய்தால், அது ரசிகர்களுக்கு எவ்வளவு பெரிய வலியைத் தரும்? இந்தச் சூழலில், சிஎஸ்கே அணி தற்போது விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவி, ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி முதல் ஐந்து போட்டிகளில் இப்படித் தோற்றது 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது தான். அப்போது சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்து, சோகமான சாதனையைப் படைத்தது.

இந்தத் தருணத்தில், சிஎஸ்கே அணி குறித்து ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. "தோனி ரன்கள் அடித்தால் போதும், தோனி சிக்ஸர் அடித்தால் போதும் என்று பேசும் டூ-கே கிட்ஸ் ரசிகர்களுக்கு நடுவில், எங்களுக்கு அணிதான் முக்கியம்" என்று அவர் கூறியுள்ளார். "சுற்றி நின்று ஊரே பார்க்கும் களம் காண்பார் போன்ற ரீல்ஸ் எல்லாம் பதிவிட்டால் இரண்டு புள்ளிகள் கிடைக்காது. அடித்து வெற்றி பெற்றால் மட்டுமே உங்களுக்கு புள்ளிகள் கிடைக்கும்.
உங்களுக்கு மெய்சிலிர்க்க வேண்டும் என்றால், பாகுபலி போன்ற திரைப்படங்களைப் பாருங்கள். மெய்சிலிர்க்க வேண்டும் என்பதற்காக இரண்டு புள்ளிகள் கிடைக்காது. தோனி முன்பே களத்துக்கு வந்து விளையாடினால் வெற்றி பெறுவோம் என்று கூறினீர்கள். ஆனால், தற்போது தோனி மைதானத்தில் நின்று கையுறையை மட்டும்தான் கழற்றி மாற்றுகிறார். சுழற்பந்து வீச்சாளர்கள் வந்தால், ஹெல்மெட்டை கழற்றி தொப்பி அணிந்து கொள்கிறார்; வேறு எதுவும் செய்யவில்லை.
சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பே கொடுப்பதில்லை. சிஎஸ்கே அணியில் ரஷீத் என்ற ஒரு வீரர் இருக்கிறார். அவர் அல்டிமேட் ஆக விளையாடுவார். நிஜமாகச் சொல்கிறேன், அவருக்கு இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கொடுங்கள். அந்தப் போட்டிகளில் ரஷீத் 30 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை என்றால், என்னுடைய வீட்டையே நான் சிஎஸ்கே பெயருக்கு எழுதித் தருகிறேன். நான் இதை ருதுராஜுக்கு ஆங்கிலத்தில் சொல்கிறேன்: 'You give a chance to Rashid. If he doesn't score more than 30 runs, I'll give my house to CSK'" என்று மனவேதனையுடன் கூறினார்.
இதேபோல், மற்றொரு ரசிகர் கூறுகையில், "சிஎஸ்கே அணியில் பேட்டிங் வரிசையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். எதற்காக ருதுராஜ் மூன்றாவது வீரராக விளையாடுகிறார் என்று தெரியவில்லை. இந்திய அணியில் விராட் கோலி தற்போதைய சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் அந்த இடத்தைக் குறிவைத்து மூன்றாவது வீரராக இறங்கி விளையாடுகிறாரா? உங்களுடைய சொந்த எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் இடம் இது அல்ல.
உங்களால் தொடக்க வீரராக விளையாட முடியும் என்றால் விளையாடுங்கள்; இல்லையென்றால் அணியை விட்டு வெளியே செல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.
இதேபோல், மற்றொரு ரசிகர், பயிற்சியாளர் பிளெமிங்கை கடுமையாக விமர்சித்துள்ளார். "ரச்சின் ரவீந்திரன் நியூசிலாந்து வீரர் என்பதால், அவருக்கு தொடக்க வீரர் இடம் வேண்டும் என்பதற்காக பிளெமிங் இவ்வாறு செய்கிறாரா? மூன்றாவது இடத்தில் களமிறக்கினால், அவர் சரிப்பட்டு வரமாட்டார்.
அப்படி அவர் சரியாக விளையாடவில்லை என்றால், எதற்கு அணியில் எடுக்கிறீர்கள்? ரச்சின் ரவீந்திரனுக்காக நன்றாக விளையாடும் வீரரின் இடம் ஏன் பறிபோகிறது? மற்ற அணிகள் எல்லாம் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்க்கும் நிலையில், ரச்சின் ரவீந்திரன் மட்டும் பேட்டிங்கில் தடுமாறுகிறார்" என்று குறைகூறியுள்ளார். "நியூசிலாந்து வீரர்களைப் பாதுகாக்க இப்படிச் செய்கிறார்" என்றும் அந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.
இன்னொரு ரசிகர், "அஷ்வினை எதற்கு தொடர்ந்து பவர் பிளேயில் பயன்படுத்துகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். "பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், பவர் பிளேயில் அஷ்வின் 21 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதற்குப் பதிலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரைப் பயன்படுத்தியிருந்தால், ரன்கள் குறைவாகச் சென்றிருக்கும்; சிஎஸ்கே போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், கேப்டன் ருதுராஜ் இதேபோல் தொடர்ந்து தவறு செய்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.
"மேலும், ஐந்து விக்கெட்டுகளை இழந்த பிறகும், 16 ரன்கள் தாண்டாமல், கடைசி கட்டத்தில் ஒரு ரன் ஒரு ரன்னாக எடுக்கிறார். சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் ஏன் ஒற்றைக்காலில் நிற்கிறார்? சூழலுக்கு ஏற்ப முடிவுகளை மாற்றத் தெரியாமல் ருதுராஜ் இருக்கிறார். இது ஒரு நல்ல கேப்டனுக்கு அழகல்ல" என்று கூறியுள்ளார்.
சமூக வலைதளத்தில் பதிவிட்ட மற்றொரு ரசிகர், "ருதுராஜின் கேப்டன்ஷிப் மிகவும் மோசமாக இருக்கிறது.
ஹர்திக் பாண்டியாவை விட அவர் மோசமாகச் செயல்படுகிறார். பவுலர்களை சுழற்சி முறையில் மாற்றும் விஷயத்தில் ருதுராஜின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. இதனால், சிஎஸ்கே அணி அவருக்கு முழு சுதந்திரம் வழங்குகிறதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. முழு சுதந்திரம் வழங்கவில்லை என்றால், எதற்காக கேப்டன் பதவியை ஏற்று அவப்பெயர் வாங்குகிறீர்கள்? 'என்னால் கேப்டன்ஷிப் செய்ய முடியவில்லை' என்று அதை விட்டுவிட்டுச் செல்ல வேண்டியதுதானே?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சிஎஸ்கே அணி இதுபோல் தொடர்ந்து தோல்விகளைத் தழுவினாலும், தாங்கள் செய்யும் தவறுகளிலிருந்து திருந்தவில்லை என்றும், இந்த சீசனும் பிளே-ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே செல்லாது என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். சிஎஸ்கே அணியின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, "பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கேவின் தொடக்க வீரர்கள் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டார்கள்.
அவர்களை வைத்து ரன் ரேட் 9-க்கு மேல் அடித்திருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், பவர் பிளேயில் நன்றாக விளையாடினால் மட்டும் போதாது. ஏழாவது ஓவரிலிருந்து 12-வது ஓவர் வரை சிஎஸ்கே அணி சொதப்பிவிட்டது. ஆட்டத்தின் நடுப்பகுதியில் கூடுதலாக 15-20 ரன்களை சிஎஸ்கே அடித்திருந்தால், கடைசி கட்டத்தில் இரண்டு ஓவர்களுக்கு 20-25 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். 40 ரன்களுக்கு மேல் அடிப்பது என்பது கடினமான விஷயம்" என்று கூறியுள்ளார்.