சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து சென்னைக்கு திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளது.
இதில் முதன் முதலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இருக்கிறது. அதற்கு பிறகு நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

அதன் பின் கௌஹாத்திக்கு சென்ற சிஎஸ்கே அணி அங்கு ராஜஸ்தான் ராயல்ஸுடன் விளையாடியது. அந்தப் போட்டியில் கடைசி ஓவர் வரை சென்றும் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து சிஎஸ்கே வீரர்கள் சென்னைக்கு மீண்டும் திரும்பினர்.
அடுத்து ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த நிலையில் விமான நிலையத்தில் சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி வீரர்கள் விமான நிலையத்திலிருந்து பேருந்தில் ஏறிய போது ரசிகர்கள் சுற்றி நின்று ஆரவாரம் செய்தனர்.
தங்கள் அணி தோல்வி அடைந்தாலும் ஆதரிப்போம் என்பதையே சிஎஸ்கே ரசிகர்கள் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்து நடைபெறும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுவதோடு அதிக நெட் ரன் ரேட் பெறுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் தற்போது சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட் -0.771 என்பதாக உள்ளது. மற்ற அணிகளை முந்தி புள்ளிப் பட்டியலில் மேலே செல்ல வேண்டும் என்றால் அதிக நெட் ரன் ரேட் அவசியம் ஆகும்.