கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் உள்ள கொல்கத்தா அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது. இதனால் நாங்கள் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறோம். அது மட்டும் இல்லாமல் கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து நன்றாகவே செயல்பட்டு இருக்கிறோம்.

எனவே இன்றைய ஆட்டத்திலும் அதிக ரன்கள் குவித்து அதனை தற்காத்துக் கொள்ள முயற்சி செய்வோம். இனி எஞ்சியிருக்கும் அனைத்து போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற வேண்டும். இருப்பினும் ஒரு கட்டத்தில் ஒரு போட்டி என்ற தான் எடுத்து விளையாடுகின்றோம். எதிர்காலம் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.
இதைப் போன்று கடந்த போட்டிகளில் நிறைய பாடங்களையும் கற்று இருக்கின்றோம். வீரர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சிறிய வாய்ப்பு நமக்கு இருந்தாலும், அதை நாம் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய ஆட்டத்தில் வெங்கடேஷ் ஐயர் காயம் காரணமாக விளையாடவில்லை.
அவருக்கு பதிலாக மனிஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று ரஹானே கூறினார். இதனை தொடர்ந்து பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, நான் கொல்கத்தாவில் அதிக போட்டிகளில் விளையாடி இருக்கின்றேன். இது எனக்கு ஒரு இன்னொரு சொந்த மைதானம் போல் தான். பல ஜோனல் கோப்பையாக இருக்கட்டும். அலுவலகத்தில் பணிபுரியும் போது ஆக இருக்கட்டும் இங்கு நான் பல போட்டிகளில் விளையாடி இருக்கின்றேன்.
தற்போது எங்களுக்கு பிளே ஆப் வாய்ப்பு கிடையாது. இதனால் இருக்கும் போட்டியை பயன்படுத்திக் கொண்டு அடுத்த சீசனுக்கு எவ்வாறு வீரர்களை தயார் படுத்துவது என்பது குறித்து தான் நாங்கள் யோசித்து வருகின்றோம். எந்தெந்த இடத்தில் எந்தெந்த வீரர்கள் களமிறங்கினால் சரியாக இருக்கும் என்பது குறித்தும் யோசித்து வருகின்றோம். எங்கள் அணியில் நடுவரிசை மற்றும் பந்துவீச்சில் சில குறைகள் இருக்கிறது.
எனவே வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்களை பயன்படுத்திக் கொண்டு ஒரு சிறந்த பிளேயிங் லெவனை நாங்கள் உருவாக்க முயற்சி செய்கின்றோம் கொல்கத்தா அணியில் இரண்டு தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். எனவே நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது கடும் சவாலாக இருக்கும். இன்று ஆட்டத்தில் ஷேக் ரசீத் மற்றும் சாம் கரன் ஆகியோர் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக கான்வே மற்றும் உர்வில் பட்டேல் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்று தோனி கூறியுள்ளார்.