சென்னை: ஐபிஎல் தொடரில் தற்போது சிக்ஸர் மழையை பேட்ஸ்மேன்கள் பொழிந்து வருகிறார்கள். வீடியோ கேம் போல் அனைத்து பந்துகளும் சிக்ஸருக்கு செல்ல வேண்டும் என்று சில ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். அதுவும் பவுண்டரி அடிக்கும் வீரர்களை விட சிக்ஸர் அடிக்கும் வீரர்களை தான் ரசிகர்களுக்கும் அதிக அளவு பிடிக்கிறது.
அது சாதாரண சிக்சர் அல்லாமல் 100 மீட்டர் தூரம் அளவு பெரிய சிக்சர் அடிக்கும் வீரர்களுக்கு என தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக தமிழக கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் ஒரு வீடியோ பதிவிட்டார்.

அதில் கிரிக்கெட் போட்டிகளில் 100 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடிப்பது எப்படி என்று அவர் செயல் முறையில் காட்டினார். பேட்டை எப்படி பிடிக்க வேண்டும். கால்களை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் அவர் விளக்கினார். ஆனால் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது.
ஏனென்றால் பத்ரிநாத் கிரிக்கெட் விளையாடும் காலத்தில் பொறுமையாக விளையாடும் பழக்கத்தைக் கொண்டவர். இந்திய அணிக்காக பத்ரிநாத் 10 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் அவர் ஒரு முறை கூட சிக்சர் அடித்தது கிடையாது. இதேபோன்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக பத்ரிநாத் 95 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இதில் மொத்தமாகவே அவர் 28 சித்தர்கள் தான் அடித்துள்ளார். பத்ரிநாத்தின் ஸ்ட்ரைக் ரேட்டும் 118 என்ற அளவில் தான் இருக்கிறது. இந்த நிலையில் பத்ரிநாத்துக்கு சிக்ஸர் அடிக்க தெரியாது என்றும், அவர் மற்றவர்களுக்கு 100 மீட்டர் தூரம் சிக்ஸர் அடிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்பதுதான் மிகப்பெரிய காமெடி என்று ரசிகர்கள் அவருடைய வீடியோ கீழ் கமெண்ட் செய்து கிண்டல் அடித்து வருகின்றனர்.
மேலும் சிலர் பத்ரிநாத் தற்போது சொல்லிக் கொடுப்பது போல் கிரிக்கெட் விளையாடும் காலத்தில் விளையாடி இருந்தால் அவருடைய கேரியர் சிறப்பானதாக இருந்திருக்கும் என்று கேலி செய்து வருகின்றனர். மேலும் சிலர் பத்ரிநாத் 6 அடிப்பது எப்படி என்று வீடியோ போட்டு இருந்தால் பரவாயில்லை. ஆனால் 100 மீட்டர் தூரம் சிக்ஸர் அடிப்பது எப்படி என்று போட்டதுதான் தவறு என்றும் விமர்சித்து வருகின்றனர்.