மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் சிஎஸ்கே அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வாங்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 43 வயதான தோனி விளையாடும் கடைசி தொடர் இதுவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல், ஐந்தாவது இடத்தையே பிடித்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தர வேண்டும் என்பதற்காகத்தான் தோனி தன்னுடைய ஊதியத்தை வெறும் 4 கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டு சிஎஸ்கே அணியில் தொடர்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதுமே ஐபிஎல் தொடருக்கு முன்பு பயிற்சி முகாமை தொடங்கி விடும்.
அந்த வகையில் சிஎஸ்கே அணி இம்முறை எப்போது பயிற்சியை தொடங்கும் என்பதை தற்போது பார்க்கலாம். சென்னை அணியில் முன்னாள் கேப்டனான தோனி, வரும் 25ஆம் தேதி சென்னைக்கு திரும்புகிறார். அதிலிருந்து சுமார் நான்கு வாரம் சிஎஸ்கே அணி வீரர்களுடன் தோனி பயிற்சி பெற இருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே நிர்வாகிகள், தோனி தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாகவும் உடற்பயிற்சியிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தோனி தற்போது 43 வயதாகி இருப்பதால் அவர் 23 வயது இளைஞர் போல் வருவார் என்று எதிர்பார்ப்பது நியாயம் கிடையாது என்றும் ஆனால் தற்போது இருக்கும் இளைஞர்களை விட தோனி நல்ல உடல் தகுதியுடன் தான் இருக்கிறார் என்றும் சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் தொடரில் தோனி தன்னுடைய 18 வது சீசனில் விளையாட இருக்கிறார். சிஎஸ்கே அணி தங்களுடைய முதல் போட்டியை வரும் மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் எதிர்கொள்கிறது. சென்னை அணி விளையாடும் முதல் ஆறு போட்டிகளில் நான்கு போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெறுகிறது.