டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 62 ஆவது லீக் ஆட்டம் டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 10வது இடத்தை பிடிக்கும் அபாயத்திலிருந்து தப்பிக்கும் இதுவரை சிஎஸ்கே அணி ஒருமுறை கூட பத்தாவது இடத்தில் நிறைவு செய்தது கிடையாது. இந்த நிலையில் டெல்லி ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டு இருக்கும் சிஎஸ்கே அணி பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

சிஎஸ்கே அணி தொடக்க வீரராக ஆயுஷ் மாத்ரே மற்றும் கான்வே ஆகியோர் களமிறங்கினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கான்வே இரண்டு பவுண்டரிகள் விளாசி நல்ல தொடக்கத்தை பெற்றார். எனினும் தூக்கி அடிக்க ஆசைப்பட்டு ரியான் பராக்கிடம் கேட்சனார். இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியில் மாற்று வீரராக இடம் பிடித்த உர்வில் பட்டேல் தனது சொந்த மைதானமான டெல்லியில் விளையாடினார்.
தனது முதல் போட்டியில் உர்வில் பட்டேல் அபாரமாக விளையாடி 11 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார்.இதில் நான்கு சிக்ஸர்கள் அடங்கும். இதனால் இன்றைய ஆட்டத்திலும் அவர் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது பந்திலே கேட்ச் ஆகி டக் ஆனார். இது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. சிஎஸ்கே அணி 12 ரன்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
சிஎஸ்கே அணி இந்த சீசனில் சரியாக விளையாடுவதற்கு காரணம் பவர் பிளேவில் ரன்கள் சேர்க்காமல் விக்கெட்டுகளை பறி கொடுப்பதுதான். மற்ற அணிகள் விக்கெட்டுகள் விழுந்தாலும் அதிரடி காட்டிய நிலையில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகள் விழுந்தால் தயக்கம் காட்டியது. எனினும் இன்றைய ஆட்டத்தில் ஆயுஸ் மாத்ரே உடன் ஜோடி சேர்ந்த அஸ்வின் அபாரமாக விளையாடி வருகின்றனர். அஸ்வின் சிக்சர், பௌண்டரி என அடிக்க ஆயுஷ் மாத்ரே தன்னுடைய அதிரடியை காட்டி வருகிறார். இதனால் சிஎஸ்கே அணி 5 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருக்கிறது.