மும்பை : ஐபிஎல் 2025 மெகா ஏலம் வரும் நவம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தீபாவளி தினத்தன்று எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்கும் என்ற பட்டியலை வெளியிட இருக்கிறது.
இந்த சூழலில் லக்னோ அணியில் இருக்கும் கே எல் ராகுல் அதிரடியாக நீக்கப்படுவார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த தருணத்தில் கே.எல். ராகுல் நீக்கப்பட்டால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் ஒவ்வொரு சீசனிலும் 500 முதல் 600 ரன்கள் அடிக்கிறார். ஆனால் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்று பல ரசிகர்கள் அழுகின்றனர். நான் கூட சமூக வலைத்தளத்தில் ஒரு மீம் பார்த்தேன். கே எல் ராகுலுக்கு முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது.
அதுமட்டுமில்லாமல் அவருக்கு திருமணமாகிவிட்டது. பலரும் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று கூறுகின்றனர். இதனால் ஏன் சிஎஸ்கே அணி கே எல் ராகுலை மீண்டும் ஏலத்தில் எடுத்துக் கொள்ளும் என அந்த மீம்சில் குறிப்பிட்டு இருந்தது. அது மட்டும் இல்லாமல் கே.எல் ராகுல் பெங்களூர் அணிக்கு கூட செல்ல வாய்ப்பு இருக்கிறது.
ஏனென்றால் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் தான் கே எல் ராகுல். பஞ்சாப் டெல்லி, மும்பை கொல்கத்தா என அனைத்து அணிகளும் வாங்க முயற்சி செய்யும். இதை போன்று ரிஷப் பண்ட் ஏலத்திற்கு வந்துவிட்டால் அவரை எப்படியாவது தேர்வு செய்ய வேண்டும் என ஒவ்வொரு அணியும் அடித்துக் கொள்ளும்.
ரிஷப் பண்டின் டி20 நம்பர் சரியாக இல்லை என்று பலரும் கூறுவார்கள். அது உண்மையல்ல. அவர் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி இருக்கிறார். பண்ட் மட்டும் ஏலத்திற்கு வந்துவிட்டால் நான் உங்களுக்கு எழுதித் தருகிறேன் அவருடைய காட்டில் பணம் மழை கொட்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். கே.எல் ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதால் அவர் லக்னோவில் இருந்து நீக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகியிருக்கிறது. இது உண்மையா இல்லையா என்பது தீபாவளி அன்று தெரிந்துவிடும்.