மும்பை: சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரை பலப்படுத்துவதற்காக வெங்கடேஷ் ஐயர், டேவிட் மில்லர், சாம் கரண் மற்றும் ராகுல் த்ரிப்பாட்டி ஆகிய 4 வீரர்களில் ஒருவரை வாங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதம் ரசிகர்களிடையே நடந்து வருகிறது. ஏற்கனவே சிஎஸ்கே அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, பதிரானா மற்றும் தோனி ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் ரூ.55 கோடி பர்ஸ் தொகையுடன் சென்னை அணி ஏலத்தில் பங்கேற்கவுள்ளது.

இதனிடையே சென்னை அணியின் ஸ்கவுட்டிங் மற்றும் அனலிஸ்ட்டாக கேகேஆர் அணிக்காக செயல்பட்டு வந்த ஏஆர் ஸ்ரீகாந்த் இணைந்துள்ளார். கேகேஆர் அணியின் இளம் இந்திய வீரர்கள் பலரையும் கண்டறிந்து கொண்டு வந்தவர் அவர் தான். இதனால் அவரின் தேர்வுகள் மற்றும் பரிந்துரைகள் நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு பலனளிக்கும் என்று நம்பப்படுகிறது.
அந்த வகையில் கேகேஆர் அணிக்காக ஆடிய சில வீரர்கள் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கேகேஆர் அணிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடப்பட்டு வரும் வெங்கடேஷ் ஐயர் மெகா ஏலத்தில் பங்கேற்கவுள்ளார். அவரை வாங்க நிச்சயம் போட்டி இருந்தாலும், சிஎஸ்கே அணி தரப்பில் தீவிர முயற்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் குஜராத் அணிக்காக ஆடி வரும் டேவிட் மில்லர் மீது சிஎஸ்கே அணி நீண்ட காலமாக கண் வைத்துள்ளது. பஞ்சாப் அணியில் இருந்த போதே மில்லரை ட்ரேடிங் முறையில் வாங்க சிஎஸ்கே அணி தரப்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அதேபோல் எம்எல்சி தொடரில் ஏற்கனவே டிஎஸ்கே அணிக்காக விளையாடி இருக்கிறார். இதனால் இம்முறை மில்லரை வாங்கவும் வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையான சாம் கரண் இம்முறை குறைந்த தொகைக்கு தான் ஏலத்தில் எடுக்கப்படுவார். அதனால் சிஎஸ்கே இம்முறை சாம் கரண் மற்றும் ராகுல் த்ரிப்பாட்டி உள்ளிட்டோரை வாங்க முயற்சிக்கும். இந்த 4 பேரில் ஒருவரை நிச்சயம் வாங்க சிஎஸ்கே அணி தீவிரமாக இருக்கும்.
ஏனென்றால் நம்பர் 4ல் சிவம் துபே வரும் பட்சத்தில் நம்பர் 3 மற்றும் நம்பர் 5ல் அதிரடியாக பேட்ஸ்மேன் ஒருவர் கட்டாயம் தேவைப்படுகிறார். ஏற்கனவே இவர்களின் 4 பேரும் ஐபிஎல் தொடரில் தங்களின் திறமையை நிரூபித்திருப்பதோடு, சிறந்த அனுபவமும் கொண்டுள்ளனர். இதனால் சிவம் துபேவை சுற்றி விளையாடும் வகையிலான வீரர்களை சிஎஸ்கே வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.