சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கின்றது. சிஎஸ்கே அணி விளையாடிய 9 போட்டிகளில் இரண்டு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று ஏழு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்த சூழலில் எஞ்சி இருக்கும் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். இந்த நிலையில் சிஎஸ்கே தற்போது அதிகபட்சமாக 14 புள்ளிகளை தான் பெற முடியும்.

ஆனால் ஏற்கனவே ஆர்சிபி அணி 10 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதேபோன்று மும்பை குஜராத், டெல்லி, பஞ்சாப், லக்னோ, கொல்கத்தா ஆகிய அணிகளும் அதிகப் புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதனால் சிஎஸ்கே வின் வாய்ப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்திலும் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவினால், தொடரை விட்டு வெளியேறும் முதல் அணியாக கருதப்படும்.
இந்த தருணத்தில் சிஎஸ்கே அணியில் இன்று வன்ஷ் பேடி என்ற வீரருக்கு வாய்ப்பு வழங்க அணி நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே பிரேவிஸ் மற்றும் ஆயுஷ் மாத்ரே என இரண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகின்றனர்.
இந்த தருணத்தில் 22 வயது வீரரான வான்ஸ் பேடியை, சிஎஸ்கே அணி பிளேயிங் லெவனில் எடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. டெல்லி பிரீமியர் லீக் தொடரில் வன்ஷ் பேடி அபாரமாக விளையாடி வருகிறார். இதனால் அவருக்கு எஞ்சி இருக்கும் ஐந்து போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
இதன் மூலம் சிஎஸ்கே அணியில் இருந்த தீபக் ஹூடா அதிரடியாக நீக்கப்படுவார் என எதிர்பார்க்கலாம். முதல் சில போட்டிகளில் டிக்கெட் விற்பனை சூடு பிடித்து திறந்த 10 நிமிடங்களில் காலியான நிலையில் தற்போது போட்டி தொடங்க இன்னும் சில மணி நேரமே உள்ள நிலையில் சேப்பாக்கத்தில் டிக்கெட் இன்னும் விற்கப்படாமல் இருக்கிறது. இதன் மூலம் ரசிகர்கள் சிஎஸ்கே மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.