சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா ஆகியோரின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. இவர்களின் மோசமான செயல்பாடு காரணமாக, அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் இவர்கள் இருவரும் சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது முதல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பிய அஸ்வின், 2025 ஐபிஎல் ஏலத்தில் 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருந்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவரது பந்துவீச்சு எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அஸ்வினால் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அவரது பந்துவீச்சை எதிரணி பேட்ஸ்மேன்கள் மிக எளிதாக எதிர்கொண்டு ரன் குவித்தனர். அஸ்வின் இந்த ஆண்டு இதுவரை 7 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். அவரது பந்துவீச்சு சராசரி 44.6 ஆகவும், எக்கனாமி ரேட் 9.29 ஆகவும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இதை அடுத்து, அவருக்கு கடந்த சில போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்குத் தற்போது 38 வயதாகும் நிலையில், 2026 ஐபிஎல் தொடரில் அஸ்வின் விளையாடுவதே சந்தேகம்தான். அவரை சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்திலேயே பயன்படுத்த யோசிக்கிறது என்றால், அவருக்கு இனி வாய்ப்பு கிடைப்பது கடினம். அவரை விடுவித்தால் சிஎஸ்கே அணிக்கு 9.75 கோடி ரூபாய் ஏலப் பணம் மிச்சமாகும்.
அதேபோல, மதீஷா பதிரானாவும் இந்த ஆண்டு சரியாக விளையாடவில்லை. அவரை 13 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணி தக்கவைத்திருந்தது. அவர் இந்த ஆண்டு அதிக ரன்களை வாரி இறைத்து வருகிறார். ஒரு ஓவருக்குச் சராசரியாக 10.39 ரன்களை அவர் விட்டுக்கொடுத்திருக்கிறார். இதனால், மதீஷா பதிரானாவையும் சிஎஸ்கே அணி அடுத்த ஆண்டு தக்கவைக்காமல் போகலாம் என முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மதீஷா பதிரானா மற்றும் அஸ்வின் என இரண்டு வீரர்களை மட்டும் சிஎஸ்கே அணி நீக்கினால், சுமார் 22.75 கோடி ரூபாயை அடுத்த ஏலத்தில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பல முன்னாள் வீரர்களும், 2026 மெகா ஏலத்திற்காக சிஎஸ்கே அணி அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு வீரர்களை மட்டுமே தக்கவைக்கும் என சுட்டிக்காட்டி வருகின்றனர்.
2026 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி முற்றிலும் புதிய அணியைக் கட்டமைக்குமா அல்லது இப்போது இருக்கும் அணியில் சிறிய அளவிலான மாற்றங்களை மட்டுமே செய்யுமா என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரும்.