சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது வேறு ஒரு லெவலுக்கு உருமாறி வருகிறது. முன்பெல்லாம் 170, 180 ரன்கள் அடித்தாலே அதனை சேஸ் செய்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி அபாரமாக விளையாடினால் மட்டுமே கடைசி பத்து வரை போட்டி சென்று வெற்றியை எட்டும்.
இப்படித்தான் ஐபிஎல் போட்டிகள் காலம் காலமாக நடந்து வருகிறது. ஆனால் தற்போது இம்பாக்ட் வீரர் விதி மூலம் ஐபிஎல் தொடரை தலைக்கீழ் மாறிவிட்டது. அது மட்டுமில்லாமல் ரன்குவிப்புக்கு சாதகமாக ஒவ்வொரு அணிகளும் ஆடுகளத்தை தயார் செய்து வருகிறார்கள்.

இதனால் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் பவுண்டரி சிக்ஸர் என அடித்து வருகிறார்கள். கேகேஆர் அணி முதல் போட்டியில் நிர்ணயித்த 175 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி அணி 16.2 வது ஓவரில் எட்டியது. இதேபோன்று சன்ரைசர்ஸ் அணி இரண்டாவது லீக் ஆட்டத்தில் 286 ரன்கள் என்ற ஸ்கோரை அடித்திருக்கிறது.
இதனை சேஸ் செய்த ராஜஸ்தான் அணி 242 ரன்கள் வரை அடித்து விட்டது. தற்போது ஒவ்வொரு அணிகளும் அதிரடியாக விளையாடி போட்டியை முன்கூட்டியே முடித்து வருகிறார்கள். இதன் காரணமாக ரன் ரேட் என்பது மிகவும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது முதல் இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் அணி 2.20 ரன் ரேட் உடன் முதலிடத்திலும், ஆர்சிபி அணி 2.13 என்ற ரன் ரேட் உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்த சூழலில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று மும்பை அணிக்கு எதிராக நல்ல முறையில் பந்து வீசி 155 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே அணி 15 அல்லது 16-வது ஓவரில் எட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சிஎஸ்கே அணி வீரர்கள் வழக்கம்போல் பொறுமையாக விளையாடி கடைசிவரை ஆட்டத்தை இழுத்து சென்றனர்.
இதனால் வெறும் ஐந்து பந்துகள் எஞ்சிய நிலையில் தான் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் ரன் ரேட் 0.49 என்ற அளவில் தான் இருக்கிறது. இதுதான் தற்போது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஐபிஎல் தொடர் தற்போது மாறிவரும் நிலையில், சிஎஸ்கே அணி இன்னும் பழைய ஆட்டத்தையே பின்பற்றி வருவதாக ரசிகர்கள் குறை கூறுகின்றனர்.
போட்டியில் முன்கூட்டியே முடித்தால் மட்டுமே ரன் ரேட் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து ஏற்கனவே தோனி ஒருமுறை விளக்கம் அளித்து இருக்கிறார். அதில் ரன் ரேட் மிகவும் முக்கியமாக இருந்தாலும், இரண்டு புள்ளிகளை பெறுவது அதைவிட முக்கியம். இதனால் 2 புள்ளிகளை முதலில் பெறுவது நாங்கள் குறியாக இருப்போம் என்று தோனி கூறியிருந்தார். தோனியின் இந்த பேச்சு சரியாக இருந்தாலும், தற்போது காலத்திற்கு ஏற்ப நாமும் மாற வேண்டும் என்பதை நிதர்சனம்.