சென்னை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணி தரப்பில் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கலாம் என்பது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 5 வீரர்கள் அடங்கிய பட்டியலை சிஎஸ்கே அணி நிர்வாகம் தயார் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஜூலை மாதம் இறுதியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு அணி நிர்வாகிகள் அளித்த கருத்துகளை எடுத்து கொண்ட பிசிசிஐ, விரைவில் ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பான விதிமுறைகளை வெளியிட தயாராகி வருகிறது. ஆகஸ்ட் மாதம் இறுதியிலேயே விதிகள் வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் சில முடிவுகளை எடுக்கப்பதற்கு தாமதம் ஏற்படுவதால், இம்மாத இறுதியில் மெகா ஏலம் தொடர்புடைய விதிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் 5 வீரர்களை தக்க வைக்க வாய்ப்புகள் வழங்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு வீரர்களுக்குமான சம்பள விவரம், ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை அந்தந்த அணி நிர்வாகங்களே மேற்கொள்ளும் வகையில் விதிகள் கொண்டு வரப்படவுள்ளன. அதன்படி சிஎஸ்கே அணி தரப்பில் தக்க வைக்கப்படவுள்ள 5 வீரர்கள் பட்டியலை தயார் செய்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருக்கும் ஒரே மாதிரியான ஒப்பந்தம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் இருவரும் ரூ.16 கோடிக்கு தக்க வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் 3வது வீரராக சிவம் துபேவையும், 4வது வீரராக இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானாவையும் தக்க வைக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. கடைசியாக சிஎஸ்கே ஜாம்பவான் தோனியை குறைந்த தொகைக்கு தக்க வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தோனியும் தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்து கடைசி சீசனில் விளையாட ஆர்வமாக இருக்கிறார்.
இதனால் ரீடென்ஷன் விதிமுறை எப்படி வந்தாலும், தோனியை குறைந்த தொகையில் தக்க வைக்கும் முடிவில் சிஎஸ்கே உள்ளது. அதேபோல் பிசிசிஐ தரப்பில் 2 முதல் 3 ஆர்டிஎம் வாய்ப்புகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆர்டிஎம் வாய்ப்புகளை டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா மற்றும் சான்ட்னர் ஆகிய மூவரில் 2 பேருக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் சவுதி அரேபியாவில் நடத்தப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.