மும்பை: சிஎஸ்கே அணியின் வரலாற்றில் தோனிக்கு பின் அதிகளவு ரசிகர்களை ஈர்த்தவர் சின்ன தல சுரேஷ் ரெய்னா தான். கடைசி வரை சிஎஸ்கே அணிக்கு விஸ்வாசமாக இருந்த அவர், தோனி ஓய்வை அறிவித்த அடுத்த நிமிடத்திலேயே ஓய்வை அறிவித்து ரசிகர்களை நெகிழ வைத்தார். இவரது இடத்தை நிரப்ப முடியாமல் சிஎஸ்கே அணி 3 ஆண்டுகளாக திண்டாடி வருகிறது.
கடந்த சீசனில் சிஎஸ்கே டாப் ஆர்டரில் ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமே சிறப்பாக விளையாடினார். தொடக்க வீரராக வந்த ரச்சின் ரவீந்திரா, நம்பர் 3ல் வந்த ரஹானே, நம்பர் 4ல் வந்த டேரல் மிட்சல் உள்ளிட்ட யாரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மொயின் அலிக்கும் வயதாகிவிட்டதால், இளம் வீரர்களை தேட வேண்டிய சூழலுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவின் இடத்தை நிரப்புவதற்கு மும்பை அணியின் நட்சத்திர இளம் வீரரான திலக் வர்மாவை வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. கடந்த 3 சீசன்களில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடியுள்ள திலக் வர்மா 38 போட்டிகளில் 6 அரைசதம் உட்பட 1,158 ரன்களை விளாசி இருக்கிறார். மும்பை அணி எப்போதெல்லாம் சிக்கலில் சிக்குகிறதோ, அப்போதெல்லாம் திலக் வர்மா காப்பாற்றியுள்ளார்.
இருந்தாலும் ஹர்திக் பாண்டியா, பும்ரா, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் உள்ளிட்டோர் இருப்பதால், திலக் வர்மாவை ரீடெய்ன் செய்வது எளிதான விஷயமல்ல. ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்த முடிவு செய்தாலும், மற்ற அணிகள் அவரை வாங்க நிச்சயம் கடுமையாக போட்டிபோடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் நிச்சயம் சிஎஸ்கே அணியும் இருக்கும். ஏனென்றால் 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போதே திலக் வர்மாவை வாங்க சிஎஸ்கே கடுமையாக போட்டி போட்டது. மும்பை - சிஎஸ்கே நேரடியாக ஏலத்தில் மோதிய ஒரு சில வீரர்களில் திலக் வர்மாவும் ஒருவர். அதுமட்டுமல்லாமல் 2018ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது மும்பை அணியில் இருந்து தான் சிஎஸ்கே அணி அம்பாதி ராயுடு மற்றும் ஹர்பஜன் சிங் இருவரையும் வாங்கியது.
வழக்கமாக மும்பை அணியில் விளையாடிய வீரர்கள் சிஎஸ்கே அணிக்கு வரும் போது கூடுதல் சிறப்புடன் விளையாடுவார்கள். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இளம் வீரர் திலக் வர்மா ரிலீஸ் செய்யப்பட்டால், நிச்சயம் அவரை வாங்க சிஎஸ்கே அணி களத்தில் குதிக்கும். இதன் மூலமாக சுரேஷ் ரெய்னாவின் இடத்தையும் சிஎஸ்கே அணியால் நிரப்பிக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.