லாகூர்: சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்தவரும், நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேனுமான டெவான் கான்வே தனது சொந்த நாடான நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த அதிரடி பேட்ஸ்மன்களில் ஒருவராக அறியப்படுகிறார் டெவான் கான்வே. நியூசிலாந்து அணியிலும் அவர் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். இந்த நிலையில், அவர் நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தார். அதற்கு முக்கிய காரணம், ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் தான். யார் எல்லாம் நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறார்களோ அவர்கள் எப்போது நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு அவர்களை அழைத்தாலும் மற்ற டி20 லீக் மற்றும் வெளிநாட்டு தொடர்களில் இருந்து விலகி உடனடியாக தேசிய அணியில் இணைய வேண்டும்.

பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் பங்கேற்பதன் மூலம் பெரிய அளவில் பணம் ஈட்ட முடியும். ஆனால் ஓராண்டு முழுவதும் நியூசிலாந்து அணிக்காக விளையாடினாலும் அதில் பாதி அளவு கூட சம்பாதிக்க முடியாது. இந்த காரணத்தால் தான் டெவான் கான்வே நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அவர் மட்டுமல்ல ஃபாபியன் ஆலன் மற்றும் கேன் வில்லியம்சன் போன்ற மற்ற முக்கிய வீரர்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. இதை அடுத்து உலகம் முழுவதும் ஐபிஎல் போல நடத்தப்படும் டி20 தொடர்களால் இனி கிரிக்கெட் அழியப்போகிறது என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் அலி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
இதில் இந்திய அணி மட்டும் தப்பித்து விடும் எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார். இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 தொடர்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் மற்ற நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கலாம் என்று விதி உள்ளது.
இந்த விதியின் காரணமாக இந்திய வீரர்கள் இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடருக்காகவும் மட்டுமே விளையாடி வருகின்றனர். ஓய்வை அறிவித்த பின்னரே அவர்கள் மற்ற வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்திய அணிக்காக விளையாடும் போதும் ஐபிஎல் தொடரில் விளையாடும் போது கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடிவதால் இந்திய வீரர்கள் யாரும் வெளிநாட்டு டி20 தொடர்களில் பங்கேற்க முயற்சி செய்வதில்லை.
இதை சுட்டிக்காட்டி உள்ள பாஸித் அலி, "டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சியை யாராலும் நிறுத்த முடியாது. ஆனால், அது கிரிக்கெட்டை அழித்துவிடும். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டை அது அழித்துவிடும். நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்யும் பேட்ஸ்மன்களுக்கு இது விஷமாக மாறும். இந்திய அணியை தவிர பல அணிகளும் டி20 கிரிக்கெட்டால் பாதிக்கப்படப் போகிறது. பணம் தான் ஜெயிக்கும். கிரிக்கெட் தோற்கும்." என அவர் கூறி இருக்கிறார்.