சண்டிகர்: தோனி மற்றும் விஜய் சங்கர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஓய்விடத்தில் ஜடேஜா அருகில் அமர்ந்து தூங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் வன்ஷ் பேடி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். அவரை பலரும் கிண்டல் செய்து வந்தாலும் அவருக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய போது இந்த சம்பவம் நடந்தது. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேஸ் செய்த போது விஜய் சங்கர் மற்றும் தோனி டெஸ்ட் போட்டி போல விளையாடி வந்தனர். வெற்றிக்காக விளையாடாமல் நிறைய பந்துகளை வீணடித்து வந்தனர்.

அந்த போட்டியை பார்த்த ரசிகர்களும் சோர்ந்து போன நிலையில் சிஎஸ்கே அணி வீரர் ஒருவரே சோர்ந்து போய் தூங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் தான் வன்ஷ் பேடி. டெல்லி டி20 லீக் தொடரில் அதிரடியாக விளையாடி கவனத்தை ஈர்த்தவர் தான் வன்ஷ் பேடி.
அங்கிருந்து 2025 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கிறார். அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். ஒரு வகையில் அவர் தோனிக்கு மாற்று வீரராகத்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கிறார். ஆனால், அவரது விக்கெட் கீப்பிங்கை தாண்டி பேட்டிங் பற்றி பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
வன்ஷ் பேடி அதிரடியாக விளையாடக் கூடியவர். டெல்லி டி20 லீக் தொடரில் அவர் எட்டு போட்டிகளில் பேட்டிங் செய்து 221 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 185.71 ஆகும். 10 பந்துகளுக்கு மேல் நின்றால் அவரது ஸ்ட்ரைக் ரேட் 200க்கு மேல்தான் இருக்கும் அந்த வகையில் தான் அவர் அந்த போட்டிகளில் ஆடி இருந்தார்.
நினைக்கும் போதெல்லாம் சிக்ஸர் அடிப்பவர் என அப்போது ரசிகர்களால் பாராட்டப்பட்டார். ஒரு போட்டியில் 41 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து மிரட்டி இருந்தார். மற்றொரு போட்டியில் ஐந்தாம் வரிசையில் இறங்கி 19 பந்துகளில் 47 ரன்கள் விளாசி இருந்தார். இப்படி தொடர்ந்து அந்த தொடரில் அவர் அதிரடி ஆட்டத்தை ஆடியிருந்தார்.
இப்படி ஒரு இளம் திறமையை சிஎஸ்கே அணி வீணடித்து வருவதாகவும் ரசிகர்கள் முன்பே சுட்டிக்காட்டி இருந்தனர். தற்போது அவர் சிஎஸ்கேவின் மூத்த வீரர்கள் மோசமாக சேஸிங் செய்த போது படுத்து தூங்கிய நிலையில் இனியாவது அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
விஜய் சங்கருக்கு பதிலாக இவரை நான்காம் வரிசையில் ஆட வைக்கலாம் அல்லது இம்பேக்ட் வீரராக விளையாட வைக்கலாம். ஏப்ரல் 8 அன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வன்ஷ் பேடிக்கு சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.