லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது.
முதல் ஐந்து போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டார். அப்போது நான்கு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது. இந்த நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் தற்போது அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக தோனி அணியின் கேப்டனாகி இருக்கிறார். அதன் பிறகு விளையாடிய ஒரு போட்டியில் வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாப நிலைக்கு சென்று இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இனி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே உறுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலையில் உள்ளது. இனி ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2025 ஐபிஎல் தொடர் பயணம் முடிவுக்கு வந்ததாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக லக்னோவில் தங்கி உள்ளனர். அங்கிருந்து அருகே உள்ள அயோத்தியாவுக்கு சென்று அங்கு ராமர் கோவில் மற்றும் அனுமான் கார்கி ஆகிய கோவில்களில் அவர்கள் தரிசனம் செய்ததாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
அங்கு அணியில் இருந்து நீக்கப்பட்ட கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சுழற் பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் உள்ளிட்ட சில சிஎஸ்கே வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். தோனி அந்த கோவிலுக்கு செல்லவில்லை. இதை அடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுமா? என்று பார்க்கலாம்.