சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் இன்னும் ஒரு நாளில் தொடங்க இருக்கின்றது. கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் இந்த தொடரின் முதல் போட்டியில் கே கே ஆர் அணியும், ஆர் சி பி அணியும் சனிக்கிழமை பலப் பரீட்சை நடத்துகிறது. சிஎஸ்கே அணி வரும் ஞாயிற்றுக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் விளையாடுகிறது.
இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக சிஎஸ்கே அணி வீரர்களுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணி வீரர்களை இரண்டு பிரிவுகளாக பிரிந்து விளையாடினர். சி எஸ் கே ஏ அணியில் ஷாயிக் ரசித், கான்வே, விஜய் சங்கர், ராகுல் திருப்பாதி போன்ற வீரர்களும் சிஎஸ்கே பி அணியில் ருதுராஜ் , சிவம் துபே, தோனி, ஜடேஜா உள்ளிட்ட வீரர்களும் விளையாடினார்கள்.

இதில் சி எஸ் கே ஏ அணி சார்பாக விளையாடிய கான்வே 25 பந்துகளை எதிர் கொண்டு 32 ரன்கள் சேர்த்தார். விஜய் சங்கர் முதல் பந்திலே கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். சிஎஸ்கே அணியில் களமிறங்கும் ராகுல் திருப்பாதி 22 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.
பந்துவீச்சில் நூர் அகமது மற்றும் ஷாம் கரன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து சிஎஸ்கே பி அணி களம் இறங்கியது. இதில் கேப்டன் ருதுராஜ் மூன்றாவது வீரராக விளையாடினார். 16 பந்துகளை எதிர்கொண்ட அவர் 26 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதே போன்று சிவம் துபே தனது வழக்கமான அதிரடியை காட்டினார்.
31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 57 ரன்கள் சேர்த்தார். இதில் சிவம் துபே ஒரு முறை ஆட்டம் இழந்தாலும் பயிற்சிகாக இரண்டாவது முறையும் பேட்டிங் செய்தார். சிஎஸ்கே அணியில் 139 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற ஸ்கோர் இருந்தபோது தோனி களத்திற்கு வந்தார். அப்போது தோனி தன்னுடைய வழக்கமான அதிரடியை காட்டினார்.
குறிப்பாக பதிரானா ஒரு ஓவரில் தோனி தன்னுடைய இரண்டு ஹெலிகாப்டர் ஷாட்களை ஆடித்து சிக்சர் விளாசினார். இதில் தோனியும் ஒரு முறை ஆட்டம் இழந்தாலும் பயிற்சிக்காக மீண்டும் அவர் பேட்டிங் செய்தார். இந்த நிலையில் சிஎஸ்கே பி அணி ஒரு ஓவர் எஞ்சிய நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. இதில் தோனி 38 ரன்கள் அடித்ததாக தெரிகிறது.
ஆனால் இது அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் என்பதால் தோனியின் அதிகாரப்பூர்வமான ஸ்கோரை உறுதி செய்ய முடியவில்லை. இதில் கவனிக்க வேண்டியது தோனி நம்பர் ஐந்தாவது வீரராக களம் இறங்கியது தான்.தோனி பேட்டிங் செய்யும்போது எந்த ஒரு கால் வலியும் இல்லாமல் விளையாடியதாக அணி நிர்வாகிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.