சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான ஒரு பேட்டிங் செயல்பாட்டை இன்று வெளிப்படுத்தி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான தோய்வான ஆடுகளும் அமைக்கப்பட்டது.
ஆனால் இது சிஎஸ்கே அணிக்கே சொந்த செலவில் சூனியம் வைத்தது போல் ஆகிவிட்டது. சிஎஸ்கே அணி பேட்ஸ்மேன்கள் ஏற்கனவே தடுமாறி வரும் நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஒரு மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். தொடக்க வீரர் கான்வே 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான ரச்சின் ரவிந்திரா டெஸ்ட் இன்னிங்ஸ் 9 பந்துகளை எதிர் கொண்டு நான்கு ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதேபோன்று ருதுராஜ்க்கு பதிலாக களமிறங்கிய ராகுல் திரிபாதி 22 பந்துகளை எதிர் கொண்டு வெறும் 16 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டம் இழந்தார்.
இதனால் சிஎஸ்கே அணி ஆறு ஓவர் முடிவில் 31 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. விஜய் சங்கர் மட்டும் இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் என அதிரடியாக ஆட முற்பட்டு 29 ரன்களில் வெளியேறினார். இதை அடுத்து அஸ்வின் இன்று பேட்டிங்கில் முன் வரிசையில் களமிறங்கினார்.
ஆனால் அவரும் ஏழு பந்துகளை எதிர் கொண்டு வெறும் 1 ரன் மட்டும்தான் சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா டக் அவுட் ஆகி ரசிகர்களை வெறுப்பேற்றினார்.
ஏதேனும் இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபக் ஹூடா விளையாடினார். ஆனால் அவரும் நான்கு பந்துகளை எதிர் கொண்டு டக்அவுட் ஆகி சிஎஸ்கே ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.
அதேபோன்று மீண்டும் ஒன்பதாவது வீரராக களம் இறங்கிய தோனி நான்கு பந்துகளை எதிர் கொண்டு வெறும் 1 ரன் மட்டுமே சேர்த்தார். அதேபோன்று நூர் அகமது ஒரு ரன் மட்டுமே எடுக்க சிவம் துபே மற்றும் அன்சூல் காம்போஜ் ஆகியோர் தட்டு தடுமாறி கடைசி விக்கெட்டுக்கு 24 ரன்களை சேர்த்தது. சிவம் துபே கடைசி வரை போராடி 29 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். சுனில் நரைன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி அடித்த மிக குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்