ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் களமிறங்கியுள்ள கொல்கத்தா அணி சிஎஸ்கே வை தங்களது சொந்த மண்ணில் இன்று எதிர் கொண்டது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதை அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என ஒன்பது பந்துகளில் 11 ரன்கள் சேர்த்தார்.இதேபோன்று அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் என அபாயகரமாக அவர் விளங்கிய நிலையில் நூர் அகமது பந்துவீச்சில் தோனியின் அபார ஸ்டம்பிங்கால் பெவிலியன் திரும்பினார். இதேபோன்று அதிரடி காட்டி வந்த கேப்டன் ரஹானே 33 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் கொல்கத்தா அணி பவர் பிளே முடிவில் 67 ரன்கள் எடுத்திருந்தது. நடு வரிசையில் ரகுவன்சி ஒரு ரன்களில் வெளியேற மணிஷ் பாண்டே மற்றும் ஆண்டிரூ ரசூல் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி அணியை சரி விலிருந்து மீட்க போராடியது.
மூன்று சிக்சர், நான்கு பவுண்டரி என அதிரடி காட்டிய ரசூல் 21 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்த நிலையில் பிரவீசின் அபார கேட்சால் பெவிலியன் திரும்பினார். இதைப் போன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் இரண்டு பவுண்டரி அடிக்க ஆறு பந்தில் ஒன்பது ரன்கள் சேர்த்தார். ரமந்தீப் சிங் 4 ரன்கள் எடுக்க கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மனிஷ் பாண்டே, 28 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்து இருக்கிறது. சிஎஸ்கே அணி 180 ரன்களுக்கு மேல் கடந்த ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக சேஸ் செய்ததே கிடையாது. ஆனால் இது 180 க்கு குறைவான இலக்கு என்பதால் சிஎஸ்கே அணி இதை வெற்றிகரமாக சேஸ் செய்து மூன்றாவது வெற்றியை பெரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.