மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்திருக்கிறது. இந்த சீசன் முழுவதும் பேட்டிங்கில் தடுமாறி வந்த சிஎஸ்கே அணி இன்று 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை குவித்து இருக்கிறது.
சிஎஸ்கே அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே மூன்று சிக்சர், 3 பவுண்டரி என 17 பந்துகளில் 34 ரன்கள் விளாசி 200 ஸ்டரைக் ரேட்டுடன் அபாரமாக ரன்களை குவித்து இருக்கிறார்.

இதேபோன்று மற்றொரு இளம் வீரரான உர்வில் பட்டேல் நான்கு பவுண்டரி இரண்டு சிக்சர் என 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதேபோன்று சிவம் துபே தன் பங்கிற்கு இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு 8 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்தார். இளம் வீரர்கள் அதிரடி காட்ட அனுபவ வீரரான கான்வே 35 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து முக்கிய கட்டத்தில் பெவிலியன் திரும்பினார்.
ஒரு கட்டத்தில் களத்திற்கு வந்த பிரவீஸ் குஜராத் அணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்சர் என பறக்க விட்டார். இவரை கட்டுப்படுத்த முடியாமல் குஜராத் வீரர்கள் தடுமாறினர். நான்கு பவுண்டரி, 5 சிக்சர் என 23 பந்துகளின் பிரவீஸ் 57 ரன்கள் சேர்த்தார். குறிப்பாக பிரவீஸ் 19 பந்துகளில் அரை சதத்தை பதிவு செய்தார்.
இதன் மூலம் நடப்பு சீசனில் அதிவேகமாக அரைசதம் அடித்த சிஎஸ்கே வீரர் என்ற பெருமையை டேவிட் பிரவீஸ் பெற்றார். குறிப்பாக 19வது ஓவரில் மட்டும் சிஎஸ்கே அணி 20 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்திருக்கிறது. நடப்பு சீசனில் சிஎஸ்கே அடித்திருக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
குஜராத் பந்துவீச்சு தரப்பில் பிரசித் கிருஷ்ணா நான்கு ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்றைய ஆட்டத்தில் தோனி களத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பேட்டிங் செய்யவே சூழல் ஏற்படாத வண்ணம் இருந்தது. இதனிடையே குஜராத் அணியை 121 ரன்களுக்குள் சுருட்டினால் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.