சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணி பேட்டிங்கில் கடுமையாக தடுமாறி வருகிறது. மற்ற அணிகள் எல்லாம் 200 ரன்களை அபாரமாக எட்டும் நிலையில் சிஎஸ்கே மட்டும் தடுமாறி வருகிறது. சிஎஸ்கே அணி ஏலத்தில் தேர்வு செய்த தீபக் ஹூடா, ராகுல் திருப்பாதி, விஜய் சங்கர் போன்ற வீரர்கள் எல்லாம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஒரு போட்டியில் ரச்சின் ரவீந்திராவும், இன்னொரு போட்டியில் ருதுராஜூம் சொல்லிக்கொள்ளும்படி ஆடினார்கள். மற்றவர்கள் சொதப்பியதால், சிஎஸ்கே அணி விளையாடிய மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.

இதனால் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக வேறு எந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.இதில் சாயிக் ரசித் தனது திறமையை அண்டர் 19 கிரிக்கெட்டில் நிரூபித்தாலும் அவர் ஆங்கர் ரோல் செய்வதற்கு தான் சரியாக வருவார். இந்த சூழலில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர் சிஎஸ்கே அணியில் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு வன்ஷ் பேடி சரியான பதிலாக இருப்பார்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான வன்ஷ் பேடி தோனியின் இடத்தை பூர்த்தி செய்யக்கூடிய வீரராக இருப்பார் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.குறிப்பாக சிஎஸ்கே அணியில் நடுவரிசை மிகப் பெரிய சொதப்பலாக அமைந்துள்ளது. இந்த தருணத்தில் நடு வரிசையில் வன்ஷ் பேடியை இறக்கினால் அவர் பட்டையை கிளப்புவார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் 22 வயது வீரரான வன்ஷ் பேடியை வெறும் 55 லட்சம் ரூபாய்க்கு தான் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. வன்ஷ் பேடி டெல்லி அணிக்காக சையது முஸ்தாக் அலி தொடரில் ஒரே ஒரு போட்டியில் தான் விளையாடினார்.ஆனால் அதிலும் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் டெல்லி பிரீமியர் லீக் தொடரில் புராணி டெல்லி அணிக்காக பண்ட் தலைமையில் வன்ஷ் பேடி விளையாடி இருக்கிறார்.
இதில் முதல் போட்டியில் 19 பந்துகளில் 47 ரன்கள் குவித்து அசத்தினார். இதேபோன்று வெஸ்ட் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 18 பந்துகளில் 30 ரன்களை அவர் விளாசினார். அதேபோன்று ஈஸ்ட் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வன்ஷ் 41 பந்துகளில் 96 ரன்களை குவித்தார். இவருடைய பேட்டிங் வீடியோவை எல்லாம் பார்க்கும்போது அடப்பாவிங்களா இப்படி இருக்கும் ஒரு வீரரையா பிளேயிங் லெவனில் சேர்க்காமல் இருக்கீங்க என்று சிஎஸ்கே நிர்வாகத்தை பார்த்து கேட்கத் தோன்றும். இதனால் வன்ஷ் பேடியை விரைவில் அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.