சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணியில் உள்ள வீரர்களுக்கு தொடர்ந்து காயம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவருக்கு பதில் 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரேவை தேர்வு செய்யப்பட்டு அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இதேபோன்று சிஎஸ்கே அணியில் இடம் பிடித்திருந்த குருபஞ்சனீத் சிங் என்ற வீரருக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு பதில் தென்னாப்பிரிக்காவில் டேவிட் பிரவீஸ் அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது அவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்த அதிரடி வீரர் வான்ஸ் பேடி கடந்த போட்டியில் விளையாட ஆயத்தமாக இருந்த நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது அவருக்கு பதில் 26 வயது வீரரான உர்வில் பட்டேலை சிஎஸ்கே அணி தேர்வு செய்திருக்கிறது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த உர்வில் பட்டேலை 30 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே அணி தற்போது ஒப்பந்தம் செய்திருக்கிறது.
ருதுராஜ் காயம் அடைந்த நிலையில் ஆயுஸ் மாத்ரே மற்றும் உர்வில் பட்டேல் என இருவரையும் சிஎஸ்கே அணி அழைத்து அவர்களுடைய திறனை பரிசோதனை செய்தது. இதில் உர்வில் பட்டேல், ஏற்கனவே ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்த சூழலில் கடந்த 2024-25 ஆம் ஆண்டு சீசனில் சையது முஸ்தாக் அலி தொடரில் ஆறு இன்னிங்சில் உர்வில் பட்டேல் 315 ரன்கள் அடித்தார்.
இதில் அவருடைய சராசரி 78 என்ற அளவிலும் ஸ்டிரைக் ரேட் 230 என்ற அளவில் இருந்தது. எனினும் உர்வில் பட்டேல், குஜராத் அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசி உர்வில் பட்டேல் 29 சிக்ஸ் அடித்து முதல் இடத்தில் இருந்தார். இந்த பட்டியலில் 27 சிக்சர் அடித்து ரஜத் பட்டிதார் இரண்டாவது இடத்தில் இருந்தார்.
அந்த தொடரில் திரிபுரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 28 பந்துகளில் உர்வில் பட்டேல் சதம் அடித்து சாதனை படைத்து இருந்தார். இதுவரை 47 டி20 போட்டிகளில் விளையாடிய உர்வில் பட்டேல் 1162 ரன்கள் அடித்திருக்கின்றார். ரஞ்சி கோப்பையிலும் விளையாடியுள்ள உர்வில் பட்டேல், 197 பந்துகளில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக 140 ரன்கள் அடித்துள்ளார். இந்த சூழலில் சிஎஸ்கே அணி ஏற்கனவே ஐபிஎல் தொடரை விட்டு விலகிய நிலையில் அடுத்த ஆண்டுக்கு அணியை கட்டமைக்கும் வகையில் தற்போது இருந்து புதிய வீரர்களை தேர்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.