மும்பை: ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கான ரேஸ் சூடுபிடித்துள்ள நிலையில், யார் யார் கரை சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏற்கனவே ஆர்சிபி, பஞ்சாப், மும்பை, குஜராத், டெல்லி உள்ளிட்ட அணிகள் 12 புள்ளிகளை எட்டியுள்ள நிலையில், லக்னோ அணி மற்றும் கேகேஆர் அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய தீவிரமாக உள்ளது.
ஐபிஎல் தொடரில் இறுதிக்கட்ட லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்த நிலையில், பிளே ஆஃப் ரேஸில் இருந்து சென்னை அணி வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக பஞ்சாப் அணி 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 13 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

அதேபோல் ஆர்சிபி அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆர்சிபி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் எஞ்சியுள்ள 4 போட்டிகளில் இன்னும் 2 வெற்றிகளை பெற்றாலே, எளிதாக முதல் 2 இடங்களில் நிறைவு செய்ய முடியும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் மும்பை அணி சிறந்த ஃபார்மில் இருப்பதால், பிளே ஆஃப் சுற்றுக்கு நிச்சயம் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த அணி இன்னும் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய அணிகளை எதிர்த்து விளையாடவுள்ளது. இதில் 2 போட்டிகளை மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுவதால், மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆஃப் கனவு எளிதாக நிறைவேறும். அதேபோல் குஜராத் அணி 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் உள்ளது.
குஜராத் அணி இன்னும் 5 போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், எளிதாக 2 வெற்றியுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் தற்போது முதல் 4 இடங்களில் உள்ள அணிகளே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று ரசிகர்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கடைசி நேரத்தில் டெல்லி, லக்னோ மற்றும் கேகேஆர் அணி எழுச்சி பெற்றால் மட்டுமே, ட்விஸ்ட் இருக்கும்.
ஆனால் லக்னோ அணி விளையாடவுள்ள 4 போட்டிகளில் 3ல் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் பற்றி சிந்திக்க முடியும். டெல்லி அணியை பொறுத்தவரை எஞ்சியுள்ள 4 போட்டிகளில் 2ல் வென்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் கேகேஆர் அணியை பொறுத்தவரை எஞ்சியுள்ள 4 போட்டிகளில் 4லும் வென்றால் மட்டுமே, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
இதனால் டெல்லி, லக்னோ மற்றும் கேகேஆர் ஆகிய 3 அணிகளும் பெறும் ஒவ்வொரு வெற்றியும், டாப் 3ல் உள்ள அணிகளுக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் கடைசி 2 இடங்களில் உள்ள ஐதராபாத் மற்றும் சிஎஸ்கே ஆகிய அணிகள் ஒரு வெற்றியை பெற்றால் கூட, அது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் கனவுடன் உள்ள அணிகளுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.