மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மறக்க வேண்டிய ஒரு சீசனாக தான் அமைந்தது. ஏனென்றால் இதுவரை சிஎஸ்கே அணி பத்தாவது இடத்தை தொடரின் முடிவில் பிடித்ததே கிடையாது. ஆனால் தற்போது முதல் முறையாக அந்த சோக சம்பவம் நடந்து விட்டது.எனினும் நடப்பு சீசனில் இறுதியில் சிஎஸ்கே அணிக்கு பல நல்ல விஷயங்கள் நடைபெற்றிருக்கிறது. பல இளம் வீரர்கள் வருகையின் மூலம் சிஎஸ்கே அணியின் பேட்டிங் அபாரமாக மாறி இருக்கிறது.
இந்த சூழலில் சிஎஸ்கே அணிக்காக இடம்பெற்ற பிரவீஸ் நடப்பு சீசனில் அபாரமாக விளையாடி வருகிறார். குஜராத் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கூட 19 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். இதன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்ற பிரவீஸ் தன்னுடைய பேட்டிங் குறித்து பேசினார். அதில் நான் கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடுகின்றேன்.

நான் நானாகவே இருக்க விரும்புகின்றேன். கிரிக்கெட்டை ஜாலியாக விளையாடும் சிறுவனாக இருக்க விரும்புகின்றேன். களத்தில் கடைசி வரை நின்று ஒவ்வொரு நிகழ்வையும் என்ஜாய் செய்ய வேண்டும். இதை தான் என்னுடைய மனதில் நான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்வேன். நான் எப்போது களத்திற்கு சென்றாலும் அணிக்காக தான் விளையாடுவேன்.
இது போன்ற ஒரு இன்னிங்சை விளையாட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். தற்போது என்னால் அது முடிந்ததை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். ஒவ்வொருவரும் என்ன சொன்னார்கள் என்பதை என் மனதுக்குள் நானே ஓட்டி பார்த்துக் கொள்வேன். டெஸ்ட் கிரிக்கெட் தான் இருப்பதிலேயே உச்சம் என்று பலரும் சொல்கிறார்கள்.
நாம் நம்முடைய இயல்புக்கு ஏற்ற வகையில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய யுக்தியாக இருக்கின்றது. என்னை டிவிலியர்ஸ் உடன் ஒப்பிட்டு பலரும் பேசுவதை பெருமையாக நினைக்கின்றேன். டிவில்லியர்சை பார்த்து தான் நானும் வளர்ந்தேன். என்னுடைய பேட்டிங் முன்னேற்றம் அடைந்ததற்கு அவரும் எனக்கு உதவினார்.
ஆனால் நான் நானாகவே இருக்க விரும்புகின்றேன். அவருடன் என்னை ஒப்பிட்டு பேசுவதை ஒரு கௌரவமாக தான் நினைக்கின்றேன் என்று பிரவீஸ் கூறினார். முன்னதாக இன்னிங்ஸ் நடுவே பேசிய பிரவீஸ் இதுபோல் பெரிய சாட் ஆடக்கூடிய திறமையை எனக்கு வழங்கிய கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடிப்படை விஷயங்களை சரியாக செய்தாலே வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார்.