மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் ஆரம்பத்தில் சிஎஸ்கே அணி கடுமையாக தடுமாறியது. சிஎஸ்கே அணியில் வீரர்கள் யாரும் சிக்ஸர்கள் அடிப்பதற்கு கூட வழி இல்லாமல் இருந்தனர். இந்த சூழலில் சிஎஸ்கே அணியில் மாற்று வீரராக இறுதி கட்டத்தில் அணிக்கு திரும்பியவர் தான் தென் ஆப்பிரிக்கா வீரர் டிவால்ட் பிரவீஸ், ரசிகர்கள் இவரை குட்டி ஏபி டூ வில்லியர்ஸ் என்று அழைப்பார்கள்.
அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபாரமாக விளையாடி இந்தப் பெயரை பெற்றார். ஆனால் அதன் பிறகு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பிரவீஸ் தேர்வாகியும் பெரிய அளவில் சாதிக்காமல் இருந்தார்.

இந்த தருணத்தில் சிஎஸ்கே அணியின் மாற்று வீரராக அணிக்குள் வந்த பிரவீஸ் முதல் போட்டியிலிருந்து அதிரடி காட்டி வருகிறார். இதுவரை நான்கு போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி உள்ள பிரவீஸ் மொத்தமாக 126 ரன்கள் அடித்திருக்கிறார். 163 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் இருக்கிறது.
அதிகபட்ச ஸ்கோர் 52 ரன்கள் ஆகும். பயமின்றி அதிரடி காட்டும் பிரவீசின் இந்த குணம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.பிரவீஸ் பேட்டிங் குறித்து பேசிய கேப்டன் தோனி, பிரவீஸ் சி எஸ் கே அணியின் எதிர்காலத்திற்கான வீரர் என்று பாராட்டி இருந்தார். இந்த நிலையில் பிரவீஸ் ஜெர்ஸியில் நம்பர் 12 என்று போடப்பட்டிருக்கும்.
இதற்கான காரணம் என்ன என்று அவரிடம் கேட்கப்பட்ட போது நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது திடீரென்று சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து எனக்கு ஏப்ரல் 12ஆம் தேதி தான் கால் வந்தது. என்னை ஒப்பந்தம் செய்ய அவர்கள் விருப்பம் தெரிவித்து இருந்தார்கள்.
இதனால்தான் என்னுடைய ஜெர்சியை 12 என்று நான் வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். பிரவீஸ் மாற்று வீரராக அணிக்கு திரும்பி இருப்பதால் இவர் அடுத்த சீசன் சிஎஸ்கே அணியில் தொடர்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இதுவரை பிசிசிஐ அதற்கு எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்த சீசன் பிரவீஸ் சிஎஸ்கே அணியில் தொடர அதிக வாய்ப்பு இருக்கிறது.