சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 190 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ஷேக் ரஷீத் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் மீண்டும் தொடக்க ஜோடியாக களம் இறங்கினர்.
இதில் ஷேக் ரஷீத் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 12 பந்துகளில் ஷேக் ரசித் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று ஆயுஷ் மாத்ரே ஆறு பந்துகளில் ஏழு ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இதனால் சிஎஸ்கே அணி 22 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் தான் சுட்டிக் குழந்தை ஷாம் கரன், ஜடேஜா ஜோடி பவர் பிளேவில் விளையாடியது. இதில் ஜடேஜா நான்கு பவுண்டரிகள் அடித்து அதிரடியை தொடங்கிய நிலையில் அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். இதனால் 12 பந்துகளில் அவர் 17 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் சிஎஸ்கே அணி 48 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில் ஷாம்கரன் மற்றும் பிரவீஸ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு புறம் பிரவீஸ் நிதானம் காட்ட மறுபுறம் சாம்கரன் அதிரடியை காட்டினார். கடந்த சில ஐபிஎல் தொடர்களாக தடுமாறிய சாம் கரண் இன்று பட்டையை கிளப்பினார். பஞ்சாப் பவுலர்களின் பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் ஷாம்கரன் சுக்கு நூறாக உடைத்தார்.
30 பந்துகளில் ஷாம்கரன் அரை சதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டி அவர் 47 பந்துகளில் 88 ரன்கள் சேர்த்தார். இதில் ஒன்பது பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் அடங்கும். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாம் கரண் ஆட்டம் இழந்தார். இதேபோன்று பிரவா இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 26 பந்தில் 32 ரன்கள் அடித்தார்.
இந்த கட்டத்தில் தான் தோனி களத்திற்கு வந்தார்.
தோனி முதல் பந்திலே ஒரு பவுண்டரி அதன் பிறகு சிக்ஸர் என அடித்து அதிரடி காட்ட முயன்றதை அடுத்துச் சாகல் பந்து வீச்சில் மீண்டும் சிக்சர் அடிக்க முயன்ற போது அவர் பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். தோனி நான்கு பந்துகளில் 11 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா இரண்டு ரன்களிலும், அன்சூல் கம்போஜ் டக் அவுட்டாக, சாஹல் ஹாட்ரிக் சாதனையை பதிவு செய்தார். சிஎஸ்கே அணி கடைசி கட்டத்தில் கொத்தாக விக்கெட்டுகளை பறி கொடுக்க 19.2 ஓவர்கள் எல்லாம் சிஎஸ்கே அணி 190 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே அணி 200 ரன்களுக்கு மேல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கமான வாய்ப்பை வீணடித்தது.