சென்னை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அதற்கான விதிமுறைகளை பிசிசிஐ விரைவில் வெளியிடவுள்ளது. எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம், எத்தனை ஆர்டிஎம் வாய்ப்புகள் அளிக்கலாம் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் பிசிசிஐ வெளியிடவுள்ளது.
இதனிடையே அணி நிர்வாகங்கள் தரப்பில் மெகா ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பயிற்சியாளர், நிர்வாகிகள் உள்ளிட்டோரை அணியின் உரிமையாளர்கள் சந்தித்து ஆலோசித்து வருகின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே அணி தரப்பில் இம்முறை தரமான ஸ்பின்னர்களை அணிக்குள் கொண்டு வர தயாராகி வருகிறது.

தீக்சனா, ஜடேஜா, சான்ட்னர், மொயின் ஆகியோர் ஏற்கனவே இருக்கின்றனர். இதில் ஜடேஜாவை மட்டுமே ரீடெய்ன் செய்ய முடியும் என்பதால், சிஎஸ்கே அணி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இம்முறை தமிழக வீரர்களை சிஎஸ்கே அணிக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். அஸ்வினின் ஐபிஎல் பயணம் சிஎஸ்கே அணியில் இருந்து தொடங்கியது. அதன்பின் 2015ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி தடை செய்யப்பட்ட நிலையில், புனே அணிக்காக விளையாடினார். அதன்பின் மீண்டும் மெகா ஏலம் நடந்த போது, அஸ்வினை வாங்க சிஎஸ்கே அணி முயற்சித்தது.
ஆனால் பஞ்சாப் அணி அவரை பெரிய விலை கொடுத்து வாங்கியது. அதன்பின் டெல்லி அணிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் கடந்த மெகா ஏலத்தில் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார். சிஎஸ்கே அணிக்காக விளையாட ரவிச்சந்திரன் அஸ்வின் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் ராஜஸ்தான் அணியால் ரிலீஸ் செய்யப்பட்டால், நிச்சயம் சிஎஸ்கே அணி அவரை வாங்க முயற்சிக்கும்.
இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் இருப்பவர் வருண் சக்கரவர்த்தி. கேகேஆர் அணியின் நட்சத்திர வீரராக உயர்ந்துள்ள வருண் சக்கரவர்த்தி, கடந்த முறை ரீடெய்ன் செய்யப்பட்டவர். தீக்சனா இடத்தில் வருண் சக்கரவர்த்தியை விளையாட வைக்க தோனி ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. கேகேஆர் அணி அவரை ரிலீஸ் செய்தால், மெகா ஏலத்தில் அவரை வாங்க சிஎஸ்கே தீவிரம் காட்டும் என்பது நிச்சயம்.
கடைசி இடத்தில் இருப்பவர் சாய் கிஷோர். நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜாவுக்கு சரியான மாற்று வீரராக சாய் கிஷோர் இருப்பார். சிஎஸ்கே அணியில் இருந்தாலும், அவர் அறிமுகமானது குஜராத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட போது தான். இம்முறை குஜராத் அணி சாய் கிஷோரை ரிலீஸ் செய்தால், நிச்சயம் குறிப்பிட்ட தொகை வரை சாய் கிஷோரை வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் தயாராக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.