மும்பை: சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தோனிக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் மற்றும் ஃபினிஷரை வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் தீவிரமாக உள்ளது. அதில் பயிற்சியாளர் பிளமிங் நட்சத்திர வீரர்களான துருவ் ஜுரெல் மற்றும் கேஎல் ராகுல் இருவரையும் டார்கெட் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் நாளை வெளியாகவுள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே அணி தரப்பில் நட்சத்திர வீரர் தோனியை ரீடெய்ன் செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியில் விளையாடாமல் இருக்கும் வீரர்கள், ஓய்வு பெற்ற வீரர்கள் இனி அன்கேப்ட் வீரர்களாக கருதலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதன் காரணமாக சிஎஸ்கே அணியால் ரூ.4 கோடிக்கு தோனியை ரீடெய்ன் செய்ய முடியும். இந்த வாய்ப்பை சிஎஸ்கே அணி நிச்சயம் பயன்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது. தோனி விளையாடுவதன் மூலமாக பிராண்ட் வேல்யூ மற்றும் ரசிகர்களின் ஆதரவும் சிஎஸ்கே அணி பக்கமே இருக்கும். இருந்தாலும் சிஎஸ்கே அணி தோனிக்கு மாற்றான வீரர்களையும் ஏலத்தில் வாங்க கவனம் செலுத்தி வருகிறது.
விக்கெட் கீப்பர்கள் மற்றும் ஃபினிஷர் என்று இரு ரோல்களையும் தோனி செய்து வருகிறார். அதே பணியினை ராஜஸ்தான் அணியின் துருவ் ஜுரெல், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் மும்பை அணியின் இஷான் கிஷன் ஆகியோர் செய்து வருகின்றனர். இதில் 4 வீரர்களுமே ரீடெய்ன் செய்யப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
டெல்லி அணியின் உரிமையாளர்களான ஜேஎஸ்டபிள்யூ குரூப் ரிஷப் பண்ட்-ஐ தக்க வைக்க நினைத்தால், ஜிண்டால் குரூப் அவர் கேப்டனாக தொடர்வதில் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் ரிஷப் பண்ட் மெகா ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் துருவ் ஜுரெலை ராஜஸ்தான் அணியால் தக்க வைப்பது கடினமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இஷான் கிஷன் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங்கில் செயல்படாததால், மும்பை அணி ரிலீஸ் செய்யவுள்ளது. அதேபோல் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனிலேயே கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாட விரும்பிய போதும், அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்று தகவல் வெளி வந்துள்ளது.
இதனால் லக்னோ அணி கேஎல் ராகுலை ரிலீஸ் செய்யவுள்ளதாக 99 சதவிகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த போதும், பயிற்சியாளர் பிளெமிங் கேஎல் ராகுலுக்கு ஆதரவாக கருத்து கூறியிருந்தார். இதனால் 4 இந்திய விக்கெட் கீப்பர்களில் யார் மெகா ஏலத்திற்கு வந்தாலும், சிஎஸ்கே அணி அவர்களில் ஒருவரை நிச்சயம் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கேஎல் ராகுல் மற்றும் துருவ் ஜுரெல் இருவரையும் குறைந்த தொகையிலேயே சிஎஸ்கே அணியால் வாங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணியால் எளிதாக தோனியின் இடத்தை நிரப்ப முடியும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.