சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தலைமையில் ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கும் இலங்கை அணி வீரர் திசாரா பெரேரா, அவரை உலகின் சிறந்த கேப்டன் என மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளில் திசாரா பெரேரா, தோனியின் தலைமையில் விளையாடி இருக்கிறார். அப்போது தோனி தனக்கு அளித்த தன்னம்பிக்கை வார்த்தைகளையும், அவர் தன்னை நம்பிய விதத்தைப் பற்றியும் சிலாகித்து பேசி இருக்கிறார் பெரேரா.

இது பற்றி திசாரா பெரேரா பேசுகையில், "சில சமயம் நான் ஃபார்வர்டு டிஃபன்ஸ் ஆடுவேன். அப்போது தோனி எனது அருகில் வந்து, 'திசாரா, நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? நீ அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன். இதை மீண்டும் செய்யாதே. ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடு' என்பார். அது போன்ற வார்த்தைகள் உண்மையாகவே நமது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்."
"அப்போது எனக்கு 20 வயது தான் இருக்கும். கிரிக்கெட் கலாச்சாரத்தில் அது மிகவும் இளம் வயது. அப்போது நான் தோனியுடன் சேர்ந்து பணி செய்வதை மிகவும் விரும்பினேன். எனக்கு ஒரு சம்பவம் நினைவில் உள்ளது. ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக நாங்கள் ஆடினோம். அப்போது துவக்கத்திலேயே நாங்கள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டோம்."
"நான் அப்போது ஆடுகளத்துக்கு பேட்டிங் செய்ய வந்தேன். அதிரடியாக ஆடுவதா அல்லது சிங்கிள் ரன்களாக எடுப்பதா என குழப்பத்தில் இருந்தேன். எனவே, நான் எப்போதும் போல ஃபார்வர்ட் டிஃபன்ஸ் ஆடினேன்."
"அப்போது மறுபுறம் இருந்த தோனி எனது அருகில் வந்தார். 'நீ என்ன செய்கிறாய்?' என்று கேட்டார். 'நாம் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அதனால் மெதுவாக ஆடுகிறேன்' என்றேன். 'நீ ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடு' என்றார். அப்போது நாங்கள் 60 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்து 190 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலைக்கு சென்றோம். நான் 40 ரன்கள் எடுத்திருந்தேன். தோனி 80 அல்லது 90 ரன்கள் சேர்த்து இருந்தார்."
"தனிப்பட்ட முறையில் தோனி தான் எனக்கு உலகின் சிறந்த கேப்டன். நான் அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகளில் ஆடி இருக்கிறேன். அதிரடி வீரராக, எனக்கு அதிக தன்னம்பிக்கையை அளித்து இருக்கிறார் தோனி. அவர் எப்போதும் என்னை நம்பினார்" என்றார் திசாரா பெரேரா.