சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் ஆறு போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவி வெறும் இரண்டு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது.
இனி எஞ்சி இருக்கும் ஆறு போட்டிகளிலும், வெற்றி பெற்றால் மட்டுமே சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். இதேபோன்று மற்ற அணிகள் எல்லாம் பவர்பிளேவில் அதிரடியாக ஆடி வரும் நிலையில் சிஎஸ்கே மட்டும் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி வருகிறார்கள்.

இதனால் இந்த போட்டியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று ஆயிரக் கணக்கான ரூபாய் கொடுத்து கள்ளச் சந்தையில் டிக்கெட் வாங்கிப் பார்த்த ரசிகர்கள் தற்போது ஏமாற்றம் அடைந்து, போட்டிக்கான டிக்கெட்டையே இணையதளத்தில் வாங்க ஆர்வம் காட்டவில்லை.இதனால் பல டிக்கெட்டுகள் காலியாக இருக்கிறது.
பொதுவாக சிஎஸ்கே அணியின் டிக்கெட்கள் இணையதளம் மூலம் விற்கப்படும் அப்போது 40 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த மைதானத்திற்கான டிக்கெட் வாங்க சுமார் 5 லட்சம் பேர் ஆன்லைன் க்யூவில் காத்திருப்பார்கள். இதனால் பல டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்கப்படும்.
பத்தாயிரம் ரூபாய் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கும் நிலைக்கு சிஎஸ்கே ரசிகர்கள் தள்ளப்பட்டனர். தற்போது சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால், ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துவிட்டது. இதனால் ஆன்லைன் கியூவில் வெறும் 4000 முதல் 10 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே லைனில் காத்திருந்தார்கள்.
அது மட்டுமில்லாமல் ஐ,கே மற்றும் டெரஸ் என ஆகிய மூன்று பகுதிகளில் டிக்கெட்டுகள் விற்காமல் காற்று வாங்குகிறது.
இதனால் சிஎஸ்கே டிக்கெட்டுக்கான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் குறைந்ததையே இது காட்டுகிறது. மேலும் கள்ளச் சந்தையில் சிஎஸ்கே டிக்கெட்டை விற்கும் கும்பலுக்கும் இது மிகப்பெரிய இடியை இறக்கியுள்ளது. ஆன்லைனில் வாங்க ஆளில்லை என்பதால் கள்ளச் சந்தையில் பத்தாயிரம், 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை.
மேலும் கடைசியாக சிஎஸ்கே அணி கொல்கத்தாவுக்கு எதிராக இங்கு விளையாடிக் போது வெறும் 103 ரன்கள் மட்டுமே அடித்தது. இதுவும் டிக்கெட் விற்பனை மந்தத்திற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் தோனி கடைசி தொடரில் விளையாட போகிறார் என்பதால் அவரைப் பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் டிக்கெட்டுகளை அதிக அளவு வாங்கி வந்தனர். ஆனால் தோனி இதையே சொல்லி ஏமாற்றுகிறார் என்ற பேச்சும் அடிபடுவதால் சிஎஸ்கே ரசிகர்கள் உஷாராகி விட்டார்கள்.