சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரிஷப் பண்ட்டை ஏலத்தில் வாங்க திட்டமிட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. தோனியின் விக்கெட் கீப்பிங் வாரிசாக முடிவு செய்து அவரை சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்க திட்டமிட்டு இருக்கிறது. ரிஷப் பண்ட் 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார்.
ஆனால், அந்த அணியின் உரிமையாளருக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதால் அவர் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகி இருந்தன. ரிஷப் பண்ட் ஏலத்தில் பங்கேற்றால் அவரை வாங்க பல அணிகளும் போட்டி போடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ரிஷப் பண்ட்டை ஏலத்தில் வாங்குவதோடு, தங்கள் அணியின் கேப்டனாக நியமிக்கவும் திட்டமிட்டு இருக்கின்றன. இதற்கு இடையே தோனிக்கு அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் குறி வைக்கப்பட்டு இருக்கிறார்.
43 வயதான நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதோடு, ருதுராஜ் கெய்க்வாட் வசம் கேப்டன் பதவியை ஒப்படைத்தார். இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் தோனி இம்பாக்ட் வீரராக விளையாட இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் அவர் விக்கெட் கீப்பிங் பணியை செய்ய முடியாது. எனவே, தோனியின் விக்கெட் கீப்பிங் பணியை வேறு ஒருவர் நிரப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்திய அணியின் தோனியின் இடத்தை நிரப்பி இருக்கும் ரிஷப் பண்ட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொண்டு வரலாம் என அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதே சமயம் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார். ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றாலும் அவர் அணியில் ஒரு வீரராக மட்டுமே போட்டிகளில் ஆட முடியும்.