சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை இறுதிப்போட்டியில் விளையாடிய அணி, அதிகமுறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணி என்று கன்சிஸ்டண்ட்டாக அசத்தல் ஆட்டத்தை சிஎஸ்கே வெளிப்படுத்தி வருகிறது.
அண்மையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் கைமாறிய நிலையில், இனி சிஎஸ்கே அணி யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சிஎஸ்கே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் தான் நிர்வகிக்கப்படுவதாக ஸ்ரீனிவாசன் அறிவித்தார். 2015ஆம் ஆண்டில் இருந்தே சிஎஸ்கே அணி தனி நிறுவனமாக மாற்றப்பட்டதும் தெரிய வந்தது.

தற்போது சிஎஸ்கே அணியின் உரிமையாளராக ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே இந்தியாவில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை கொண்டுள்ள ரூபா குருநாத், தொடர்ந்து எஸ்ஏ20 லீக்கில் ஜேஎஸ்கே அணியையும், மேஜர் லீக் கிரிக்கெட்டில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியையும் வாங்கியுள்ளார்.
இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவிலும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தங்களது பயிற்சி அகாடமியை திறந்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் நடந்து வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரிலும் சிஎஸ்கே நிர்வாகம் கால்பதிக்க திட்டமிட்டு வருவது தெரிய வந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் மகளிர் கிரிக்கெட்டுக்கு எதிராக ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால் இன்று மகளிர் கிரிக்கெட்டின் வருவாய் அதிகரித்து வருகிறது. மகளிர் பிரீமியர் லீக் தொடரின் வெற்றி கடந்த சீசனின் போதே பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூர் ஆகிய நகரங்களில் மகளிர் கிரிக்கெட்டை பார்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் சந்தையில் பிரபலமாவதற்கு முன்பாகவே சிஎஸ்கே மகளிர் அணியை வாங்கும் முடிவிற்கு வந்துள்ளது.
இதுகுறித்து சிஎஸ்கே நிர்வாகி பேசுகையில், மகளிர் கிரிக்கெட் மூலம் வரும் பொருளாதார நம்பகத்தன்மையை ஆராய்ந்து வருகிறோம். அதேபோல் கடந்த ஆண்டு டபிள்யூபிஎல் தொடரில் பங்கேற்ற 5 ஐபிஎல் அணி நிர்வாகங்களின் அனுபவங்களையும் கேட்டு ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். தற்போது தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரங்களில் சிஎஸ்கே அகாடமி மூலம் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் பெண் குழந்தைகளும் பயிற்சி பெறுவதற்கு அதிகளவில் விருப்பம் தெரிவித்து வரும் சூழலில், சிஎஸ்கே அணி நிர்வாகம் டபிள்யூபிஎல் தொடரில் கால்பதிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் சில ஆண்டுகளில் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.