சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப் பெரிய ரிஸ்க் எடுக்க உள்ளது. இதுவரை டி20 போட்டிகளில் விளையாடாத 17 வயது வீரரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அறிமுகப்படுத்த உள்ளதுதான் இதற்கு காரணம். இது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில், சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை அனுபவ வீரர்களை மட்டுமே அதிகம் நம்பி விளையாடி ஐந்து கோப்பைகளை வென்ற அணியாகும்.
ஆனால், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் 17 வயது வீரரை நம்பி பிளேயிங் லெவனில் சேர்ப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீரர் ஆயுஷ் மத்ரே. சிஎஸ்கே கேப்டன் தோனி இந்த 17 வயது வீரரை அறிமுகம் செய்து இந்த ரிஸ்க்கை எடுக்க இருக்கிறார்.

2025 ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிக மோசமாக அமைந்து வருகிறது. இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் ஐந்து தோல்விகளைச் சந்தித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் உள்ளது. மேலும், அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் ஐந்து போட்டிகளில் விளையாடிய நிலையில் முழங்கை காயம் காரணமாக தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாகத்தான் இந்த 17 வயது மும்பை வீரரான ஆயுஷ் மத்ரேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணியில் மாற்று வீரராகச் சேர்த்திருக்கிறது. ருதுராஜுக்கு காயம் ஏற்பட்ட உடனேயே ஆயுஷ் மத்ரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்டார். அங்கு அவரை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் உள்ளிட்டோர் பரிசோதித்தனர். அவரது ஆட்டம் அவர்களுக்கு முழு திருப்தியை அளித்தது.
இதை அடுத்து, ஆயுஷ் மத்ரேவை தற்போது சிஎஸ்கே அணி தங்களது பிளேயிங் லெவனில் விளையாட வைக்க உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாடும் நிலையில், அந்தப் போட்டியில் ஆயுஷ் மத்ரே ஐபிஎல்-லில் அறிமுகம் ஆவார். ஆனால், இதற்கு முன் அவர் உள்ளூர் அளவில் கூட டி20 போட்டிகளில் விளையாடியதில்லை என்பதுதான் இதில் வியப்பின் உச்சம்.
அவர் 2024-25 ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடி இருந்தார். அந்த அணியின் துவக்க வீரராக அவர் பல சிறப்பான ஆட்டத்தை ஆடி இருந்தார். மும்பை அணியில் இருந்த அனுபவ வீரர்களை விட ஆயுஷ் மத்ரே சிறப்பாக விளையாடினார். இடையே ரோஹித் சர்மா ஒரு போட்டியில் மும்பை அணிக்காக விளையாட வேண்டி இருந்தது.
அப்போது ஆயுஷ் மத்ரே அணியில் இருந்து நீக்கப்பட்டு ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார். அதற்கு அப்போது விமர்சகர்கள் பலரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர். ஏனெனில், ரோஹித் சர்மாவை விட ஆயுஷ் மத்ரே சிறப்பாக விளையாடுவதாக அவர்கள் கூறி இருந்தனர். இது ஆயுஷ் மத்ரேவுக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகப் பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளைச் செய்த ரோஹித் சர்மாவை விட ஆயுஷ் மத்ரே சிறப்பாக விளையாடியிருக்கிறார் என அப்போதே அவர் புகழ் பெற்றுவிட்டார். ஆனால், இதில் முக்கியமான விஷயம் ரஞ்சி டிராபி ஒரு டெஸ்ட் தொடர்; அது அதிரடியாக விளையாடக் கூடிய டி20 தொடர் அல்ல.
ரஞ்சி டிராபியைத் தவிர்த்து, ஆயுஷ் மத்ரே லிஸ்ட் ஏ எனப்படும் ஒருநாள் போட்டிகளிலும் மும்பை அணிக்காகச் சில போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்த குறைந்த அனுபவத்தை மட்டுமே வைத்துக் கொண்டு அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருப்பது நிச்சயம் சாதனைக்குரிய விஷயம் தான். தற்போது அவர் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மாற்று வீரராக சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனிலும் இடம் பிடிக்க இருக்கிறார்.
இது தோனி எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க் ஆகப் பார்க்கப்படுகிறது. ஆனால், சிஎஸ்கே அணி தற்போது இருக்கும் நிலையில் இதைத்தவிர வேறு வழி இல்லை. நேற்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் பேசுகையில், "இந்த ஆண்டு சிஎஸ்கே அணி மோசமாக விளையாடி வருவதால், மாற்று வீரர்களாக இருக்கும் அனைவரையும் நாங்கள் பயன்படுத்த வேண்டி வந்துள்ளது" எனக் குறிப்பிட்டுச் சொன்னார். அதுதான் உண்மையும் கூட.
மேலும், ஸ்டீபன் பிளம்மிங் கூறுகையில், ஆயுஷ் மத்ரே தங்களைத் திருப்திப்படுத்தி இருப்பதாகக் கூறினார். அவரைப் பரிசோதித்த போது அவர் ஆடிய ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்ததாகச் சுட்டிக் காட்டினார். அப்படி என்றால், அவரை பிளேயிங் லெவனில் சேர்ப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது.
மேலும், சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையும் பலவீனமாகவே உள்ளது. தற்போதைய பிளேயிங் லெவனில் ராகுல் திரிபாதி மற்றும் விஜய் சங்கர் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்களாக உள்ளனர். சிஎஸ்கே அணியில் இருந்த குர்ஜப்நீத் சிங் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக, தென்னாப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் டெவால்ட் பிரெவிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்று வீரராகச் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இதை அடுத்து, ராகுல் திரிபாதி மற்றும் விஜய் சங்கரை நீக்கிவிட்டு, ஆயுஷ் மத்ரே மற்றும் டெவால்ட் பிரெவிஸ் சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. சிஎஸ்கேவின் பேட்டிங் படுமோசமாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் அந்த பலவீனத்தை போக்குவார்களா என்று எதிர்பார்ப்பும் உள்ளது. ஐபிஎல் தொடரின் இடையே சிஎஸ்கே அணி எடுத்திருக்கும் இந்த வியூகம் வெற்றி பெறுமா அல்லது மீண்டும் சிஎஸ்கே அணி தோல்விகளை சந்திக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
சிஎஸ்கே வட்டாரத் தகவல்களின்படி, புதிய மாற்றங்களுக்குப் பிறகு, இம்பாக்ட் வீரரையும் சேர்த்து, சிஎஸ்கே அணியின் 12 வீரர்கள் கொண்ட பட்டியல் பின்வருமாறு அமையலாம்.
ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் மத்ரே, சிவம் துபே, டெவால்ட் பிரெவிஸ், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரானா.