மும்பை: ஐபிஎல் மெகா ஏலம் நடப்பதற்கு முன்பாக பல்வேறு ட்ரேட் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனிலேயே குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை பெரும் விலை கொடுத்து மும்பை அணி வாங்கியது. அதேபோல் மும்பை அணியிடம் இருந்து கேமரூன் க்ரீனை பெரும் விலைக்கு ஆர்சிபி பெற்று கொண்டது.
அதேபோல் தேவ்தத் படிக்கல், ஆவேஷ் கான் இருவரையும் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் ட்ரேட் செய்து கொண்டன. இதன் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக ஏலத்தை விடவும் ஐபிஎல் உரிமையாளர்கள் ட்ரேட் செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பதாக புரிந்து கொள்ள முடிகிறது. இம்முறையும் மும்பை மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையில் மிகப்பெரிய ட்ரேட் ஒன்று நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணியிலும், மும்பை அணியின் சீனியர் வீரரான சூர்யகுமார் யாதவ் கேகேஆர் அணிக்கும் செல்லலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை அம்பானி அல்லாமல் கேகேஆர் அணி தரப்பில் மும்பை அணி நிர்வாகத்தை அணுகியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் ஒரு பக்கம் இருக்க, சிஎஸ்கே அணி தரப்பில் மிகப்பெரிய ட்ரேட் ஒன்று நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சிஎஸ்கே அணி தரப்பில் ராபின் உத்தப்பா மட்டுமே ட்ரேட் மூலம் வாங்கப்பட்டுள்ளார். எந்த அணிக்கும் சிஎஸ்கே அணி தனது வீரர்களை அனுப்பியதாக வரலாறே கிடையாது.
ஒருமுறை டேவிட் மில்லரை கூட சிஎஸ்கே அணி ட்ரேட் மூலம் வாங்க முயற்சித்தது. ஆனால் சிஎஸ்கே அணி தனது வீரர்களை கொடுக்க முன் வராததால் அந்த சம்பவம் நடக்கவில்லை. ஆனால் இம்முறை முதல்முறையாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தங்களது நட்சத்திர வீரரான சிவம் துபேவை கொடுக்க முன் வந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த ட்ரேட் ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுடன் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை சிவம் துபேவை சிஎஸ்கே அணி ட்ரேட் செய்தால் அதற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அல்லது டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இருவரில் ஒருவரை கேட்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே விக்கெட் கீப்பர் என்பதால், தோனிக்கு நிகரான பிராண்ட் வேல்யூ கொண்ட வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் தேடி வருவதாக பார்க்கப்படுகிறது.