சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற்ற நிலையில், இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய விப்ரஜ் நிகாம் குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். இவர் 2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டு இருக்க வேண்டும்.
சிஎஸ்கே-வின் திறமை கண்டறியும் குழுவால் விப்ரஜ் நிகாம் பெயர் பரிந்துரை செய்யப்பட்டும் சிஎஸ்கே நிர்வாகம் அவரை ஏலத்தில் வாங்கவில்லை. ஆனால், அதே 20 வயது விப்ரஜ் நிகாம் இன்று சிஎஸ்கே அணியை தோற்கடித்து இருக்கிறார் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

20 வயது லெக் பிரேக் பந்துவீச்சாளரான விப்ரஜ் நிகாம் இந்த போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சரியாக ஆறாவது ஓவரில் பந்து பந்துவீசத் துவங்கிய அவர் தொடர்ந்து தனது 4 ஓவர்களையும் முடித்து சிஎஸ்கே அணியை மிகப்பெரிய இக்கட்டான நிலைக்கு கொண்டு சென்றார்.
இந்த போட்டியில் டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் விப்ரஜ் நிகாம். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். அபிஷேக் போரல் 20 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தபோது ரச்சின் ரவீந்திரா இரண்டாவது ஓவரிலேயே 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மூன்றாவது ஓவரில் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து டெவோன் கான்வே மற்றும் விஜய் சங்கர் இணைந்து பேட்டிங் செய்து வந்தனர்.
அப்போது டெவோன் கான்வே ஆறாவது ஓவரில் விப்ரஜ் நிகாம் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்கு முன்பே சிஎஸ்கே அணி நிதான ஆட்டத்தை ஆடி வந்த நிலையில் விப்ரஜ் நிகாம் பந்து பந்துவீசத் துவங்கியதற்கு பிறகு மேலும் ரன் குவிக்க முடியாமல் திணறியது. தொடர்ந்து ஆறாவது ஓவர், எட்டாவது ஓவர் என வரிசையாக அவர் பந்து வீசினார்.
அவர் 6 வது ஓவரில் 8 ரன்கள் விட்டுக் கொடுத்து கான்வே விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து எட்டாவது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 10 வது ஓவரில் சிவம் துபேவின் விக்கெட்டை வீழ்த்தி 6 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்தார். அடுத்து 12 வது ஓவரில் நான்கு ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்தார். அவர் வீசிய நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட் எடுத்திருந்தார்.
இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் ஒரு ஓவரை மட்டுமே வீசியிருந்தார். விப்ரஜ் நிகாம் சிறப்பாக பந்து வீசியதால் அவரை அவரது நான்கு ஓவர்களையும் முழுமையாக வீச வைத்தார். அந்த அளவுக்கு விப்ரஜ் நிகாமின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் விப்ரஜ் நிகாமை வாங்கி இருக்கலாம் என தற்போது பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
சமீபத்தில் அஸ்வினின் யூடியூப் தளத்தில் சிஎஸ்கே அணியின் திறமை அடையாளம் காணும் குழுவை சேர்ந்த வித்யுத் சிவராமகிருஷ்ணன் என்பவர் பேட்டி அளித்திருந்தார். அவர் விப்ரஜ் நிகாமின் பெயரை தான் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர் சிறப்பாக பந்து வீசுவதாக சொல்லி இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி அவரை வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அதே நிகாம் தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்து இருக்கிறார். இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசியபோதும் கே.எல். ராகுல் 77 ரன்கள் எடுத்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதே போலவே பிரியன்ஷ் ஆர்யா, அனிக்கேத் வர்மா ஆகியோரது பெயர்களையும் தான் பரிந்துரை செய்ததாக அந்த வீடியோவில் வித்யுத் சிவராமகிருஷ்ணன் கூறி இருந்தார். அதை வைத்து தான் சிஎஸ்கே ரசிகர்கள் தற்போது அதிருப்தி அடைந்து உள்ளனர். இளம் வீரர்களை ஏலத்தில் வாங்காமல் சிஎஸ்கே அணி பெரிய தவறை செய்து விட்டதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி போன்ற வீரர்களை ஏலத்தில் வாங்கிய சிஎஸ்கே அணி தற்போது அவர்களை பிளேயிங் லெவனில் ஆட வைக்க முடியாமல் திண்டாடி வருகிறது. அவர்கள் இருவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பில் சரியாக ரன் குவிக்கவில்லை. அதனால், அவர்கள் இருவரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.
தீபக் ஹூடாவிற்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கும் விஜய் ஷங்கர் ரன் ரேட் தேவைக்கு ஏற்ப விளையாடவில்லை. அவர் அரைசதம் அடித்தாலும் அதனால் சிஎஸ்கே அணிக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. ஆனால், இப்போதும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தங்கள் அணியில் இருக்கும் இளம் வீரர்களை நம்பவில்லை என சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆண்ட்ரே சித்தார்த், வன்ஷ் பேடி, அன்சுல் கம்போஜ் போன்ற சிறந்த உள்ளூர் இளம் வீரர்கள் சிஎஸ்கே அணியில் மாற்று வீரர்களாக உள்ளனர். அவர்களில் ஒன்று, இரண்டு பேருக்காவது சிஎஸ்கே அணி இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் வாய்ப்பு அளித்து இருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை. மேலும், சிஎஸ்கே அணியில் வலுக்கட்டாயமாக ஆறு பவுலர்கள் இடம் பிடித்து வருகின்றனர்.
அவர்களில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே ஓரளவு பேட்டிங் செய்கிறார். ஆனால், அவரை நம்பி சேஸிங் செய்யக் கூட முடியாது என்பது தான் யதார்த்தமாக உள்ளது. இனி வரும் போட்டிகளில் சிஎஸ்கே அணி இளம் வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும். அடுத்து பேட்டிங்கில் தோனி இல்லாமல் ஆறு பேட்ஸ்மேன்கள் இருக்கும் வகையிலான அணியை தயார் செய்ய வேண்டும்.
தற்போது இருக்கும் அணியில் அதை செய்வது கடினம் தான் என்றாலும் சிஎஸ்கே அணிக்கு வேறு வழியில்லை. அஸ்வினை நீக்க வேண்டிய அவசியம் வந்தாலும் அதை யோசிக்காமல் செய்ய வேண்டும். சிஎஸ்கே அணி மீண்டும் தோல்வி அடைந்தால் அதில் இருந்து மீண்டு பிளே ஆஃப் செல்வது கடினமாக மாறி விடும்.