சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய நான்காவது லீக் ஆட்டத்தில் இன்று டெல்லி அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் ருதுராஜ் களமிறங்க மாட்டார் என்றும் தோனி தான் கேப்டன் ஆக இருக்கப் போகிறார் என்றும் செய்திகள் பரவின. ஆனால் ருதுராஜ், முழு உடல் தகுதி எட்டியதை எடுத்து அவர் கேப்டனாக களமிறங்கினார்.

டாஸ் குறித்து கருத்து தெரிவித்த டெல்லி அணி கேப்டன் அக்சர் பட்டேல், நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கின்றோம். இந்த ஆடுகளத்தில் பவுலர்களுக்கும் சிறு உதவிகள் கிடைக்கும் என நான் நினைக்கின்றேன். போட்டி போக போக ஆடுகளம் மெதுவாக மாறும். எங்கள் அணியில் ஏற்கனவே பல முன்னாள் கேப்டன்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக எனக்கு ஆலோசனைகளை வழங்கி உதவுகிறார்கள்.
நாங்கள் அதே காம்பினேஷன் வைத்து தான் விளையாடுகிறோம். எனினும் இன்றைய ஆட்டத்தில் டுபிளசிஸ் முழு உடல் தகுதியைப் பெறவில்லை. அவருக்கு பதிலாக சமீர் ரிஸ்வி விளையாடுகிறார் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ், நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தோம். ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருக்கிறது.
தற்போது வானமும் மேகமூட்டத்துடன் இருக்கின்றது. இதனால் ஆடுகளம் பெரிய அளவு மாறாது என நினைக்கிறேன். டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே உத்வேகம் என்பது மிகவும் முக்கியம். எங்கள் அணியில் வீரர்கள் அனைவரும் நல்ல முறையில் இருக்கிறார்கள். நல்ல மன ஓட்டத்தில் உள்ளனர். எங்கள் அணியில் பீல்டிங் தான் முன்னேற வேண்டும்.
பீல்டிங்கில் முன்னேறுவது எப்படி என்பது குறித்து நாங்கள் கடுமையாக உழைத்து வருகின்றோம். என்னுடைய கையும் தற்போது நன்றாக இருக்கிறது. அதனால் பிரச்சனை இல்லை. எங்களது அணியில் இன்று கான்வே விளையாடுகிறார். ஜிம்மி ஓவர் டன்னுக்கு பதிலாக அவர் களமிறங்குகிறார். இதேபோன்று ராகுல் திருப்பாதிக்கு பதிலாக முகேஷ் சவுத்ரி களமிறங்க உள்ளார் என்று ருதுராஜ் தெரிவித்துள்ளார்