அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்று இருக்கும் தமிழக வீரர் சாய் கிஷோரை சக வீரரான முகமது சிராஜ் திட்டினார். மேலும், பந்தை தூக்கி எறிந்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது கடைசி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அதிரடியாக ரன் சேர்த்து வந்தனர். அப்போது உர்வில் படேல் மற்றும் டெவோன் கான்வே இணைந்து விளையாடி வந்தனர்.

முகமது சிராஜ் பந்து வீசினார். அப்போது உர்வில் படேல் பந்தை தட்டிவிட்டு ஒரு ரன் ஓடினார். அவர்கள் ஒரு ரன் ஓடி முடித்துவிட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் தேவையின்றி பந்தை தூக்கி எறிந்து ரன் அவுட் செய்ய முயன்றார். ஆனால், பந்தை பிடிப்பதற்கு ஸ்டம்ப் அருகே யாரும் இல்லாததால் ஓவர் த்ரோ ஆனது.
அப்போது ஸ்கொயர் லெக் பகுதிக்கு பந்து சென்றது. அதைப் பிடிப்பதற்காக சாய் கிஷோர் ஓடினார். அவர் கீழே சரிந்து பந்தை பிடிக்க முயன்றபோது தவறுதலாக பந்தை தட்டிவிட்டார். சுப்மன் கில் ஓவர் த்ரோ செய்ததால் ஒரு ரன் ஓடிய உர்வில் படேல், சாய் கிஷோர் செய்த தவறைப் பார்த்து மேலும் ஒரு ரன் ஓடினார். அந்த ஒரு பந்தில் மட்டும் மூன்று ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
அடுத்தடுத்து இரண்டு ஃபீல்டிங் தவறுகள் நடந்ததைப் பார்த்த பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கோபமடைந்தார். நியாயமாக இந்த தவறை ஆரம்பித்து வைத்த சுப்மன் கில் மீது அவர் கோபத்தை காட்டி இருக்க வேண்டும். ஆனால், அவர் கேப்டன் என்பதால் சாய் கிஷோரிடம் தனது கோபத்தைக் காட்டினார்.
சாய் கிஷோரைப் பார்த்து திட்டிய சிராஜ், பந்தை வாங்கியவுடன் தூக்கித் தரையில் அடித்தார். அதன் பின்னரே சுப்மன் கில் அவர் அருகே வந்து சமாதானம் செய்ய முயன்றார். அப்போதும் முகமது சிராஜ் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார். இந்த சம்பவத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.
வர்ணனையாளர் ரவி சாஸ்திரியும், "ஏன் மியான் (சிராஜ்) இப்படி செய்கிறார்?" என்று கூறியிருந்தார்.இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 230 ரன்கள் எடுத்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்து 83 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.