அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி டாஸ் போடும் நிகழ்வில் பங்கேற்றார். இதுவே தோனி கேப்டனாகப் பங்கெடுக்கும் கடைசிப் போட்டி என ரசிகர்கள் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
2025 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்தார். 2023 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றதற்குப் பிறகு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 2024 ஆம் ஆண்டு முதல் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

2025 ஐபிஎல் தொடரில் முதல் ஐந்து போட்டிகளுக்குப் பிறகு ருதுராஜ் காயத்தால் விலகினார். அதன் காரணமாக தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு மோசமான ஆண்டாகவே அமைந்தது. அந்த அணி விளையாடிய முதல் 13 போட்டிகளில் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்றது.
இந்த நிலையில், தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாடியது. தோனி இந்தப் போட்டியில் கேப்டனாகப் பங்கேற்றார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் அவர் கேப்டனாகப் பங்கேற்கும் கடைசிப் போட்டி இது என ரசிகர்கள் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர்.
தோனி அடுத்த ஆண்டு விளையாடுவார் என்றே சிஎஸ்கே வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், இந்தப் போட்டியில் டாஸ் போடும் நிகழ்வின் போது அவர் தனது உடல் தகுதியைப் பற்றி பேசினார். அப்போது தான் நன்றாக இருப்பதாகக் கூறினார். எனவே அவர் மீண்டும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.
மேலும் அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து அடுத்த எட்டு மாதங்களில் முடிவெடுப்பதாகக் கூறியிருந்தார். எனவே இன்று அவர் ஓய்வு அறிவிப்பதற்கான வாய்ப்புகள் பெரிதாக இல்லை.