சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. கேப்டன் தோனியை கண்டதும் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பி கொண்டாடினர்.
டாஸ் குறித்து பேசிய கொல்கத்தா அணி கேப்டன் ரகானே முதலில் நாங்கள் பந்து வீச முடிவு எடுத்து இருக்கிறோம். கடந்த போட்டியில் பல நல்ல விஷயங்கள் எங்கள் அணியில் நிகழ்ந்தது. எனினும் ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் முன்னேற்றம் அடைய விரும்புகிறோம்.

இன்றைய ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆடுகளத்தின் தன்மை மாறாது என நினைக்கிறேன். எங்களுடைய பேட்டிங் மிகவும் ஆழமாக இருக்கும். எனவே நாங்கள் முதலில் பந்துவீசி சிஎஸ்கே நிர்ணயிக்கும் இலக்கை சேஸ் செய்வோம் என நினைக்கின்றேன். இதேபோன்று எங்களுடைய அணியில் ஸ்பென்சருக்கு பதிலாக மோயின் அலி களம் இறங்குகிறார் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய கேப்டன் தோனி, நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தோம். ஏனென்றால் கடந்த சில போட்டிகளில் ரன்களைச் சேஸ் செய்து தோல்வியை தழுவி விட்டோம். மேலும் ஆடுகளமும் இரண்டாவது இன்னிங்ஸில் பிற்பகுதியில் கொஞ்சம் தோய்வு அடைகிறது. எதிர்பார்த்த அளவு பனிப்பொழிவும் இல்லை. இதனால் முதலில் பேட்டிங் செய்வதை நல்லது என்று நினைக்கின்றேன்.
எங்கள் அணியின் தொடக்க வீரர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் அது நடு வரிசை வீரர்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கின்றது. ருதுராஜ் முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் இந்த தொடர் முழுவதும் விளையாட மாட்டார். ருதுராஜ் போன்ற ஒரு வீரர் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு தான்.
எனினும் தற்போது ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு மிகவும் முக்கியமாக மாறிவிட்டது. நாங்கள் ஆரம்பத்திலேயே பல போட்டிகளில் தோற்று விட்டோம். தற்போது அடிப்படை விஷயங்களை சரியாக செய்தாலே வெற்றி கிடைத்து விடும். டாட் பால்களை வீசுவது, கேச்சை பிடிப்பது என்ற விஷயங்களை கவனம் செலுத்த வேண்டும்.இரண்டு போட்டிகளில் நாங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவி விட்டோம்.
அதைத் தவிர்த்துப் பார்த்தால் சின்ன சின்ன விஷயங்களில் நாங்கள் கோட்டை விட்டதால் தான் மற்ற தோல்விகள் கிடைத்திருக்கிறது. அதில் முக்கியமானது பவர் பிளேவில் ஒரு ஓவரில் 20 ரன்களுக்கு மேல் அடிக்க விடுவது. எங்களுடைய பேட்டர்ஸும் பவுலர்களும் பவர் பிளேவில் சரியாக செயல்பட வேண்டும். எங்கள் அணியில் பெரிய ஷாட் ஆடக்கூடிய வீரர்கள் இல்லை. எனினும் நாங்கள் பவுண்டரிகளை அடிக்கக்கூடிய அணியாக இருக்கின்றோம்.
உங்களுடைய உள்ளுணர்வை நம்பி விளையாடுங்கள். நல்ல தொடக்கத்தை பெற வேண்டும். இதைப் போன்று பவுலிங்கில் விக்கெட்டுகளை விரைவாக எடுக்க வேண்டும் என்று தோனி கூறி உள்ளார். மேலும் சிஎஸ்கே அணியில் இன்று ருதுராஜ் பதிலாக ராகுல் திருப்பாதியும் முகேஷ் பதிலாக பதிலாக அன்சூல் காம்போஜும் விளையாடப் போகிறார்கள்.