லக்னோ: ரிஷப் பண்ட் செய்த ஒரு தவறால்தான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வி அடைந்ததாக தற்போது விமர்சனம் எழுந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றிக்கு மிக அருகே சென்றபோதும், கடைசி நான்கு ஐந்து ஓவர்களில் போட்டி சிஎஸ்கேவுக்கு சாதகமாக மாறியது.
தோனி அதிரடியாக விளையாடியது இந்த போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தியது என்றாலும், ரிஷப் பண்ட் அவரை கட்டுப்படுத்துவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டார் என பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். போட்டியில் தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்திருந்தார். ஆனால், தோனி பேட்டிங் செய்ய வந்த பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தவில்லை.

அப்போது சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய்க்கு ஒரு ஓவர் மட்டும் மீதம் இருந்தது. மற்ற லக்னோ அணியின் சுழற்பந்துவீச்சாளர்களின் ஓவர்கள் முடிவுக்கு வந்திருந்தன. ரவி பிஷ்னோயின் அந்த ஒரு ஓவரை பயன்படுத்தியிருந்தால் நிச்சயமாக திருப்பம் ஏற்பட்டிருக்கலாம் என பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ரவி பிஷ்னோய் அதற்கு முன்பு மூன்று ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மொத்தம் ஒன்பது டாட் பால்களையும் வீசி இருந்தார். அதாவது அவர் வீசிய 18 பந்துகளில் பாதிக்கு பாதி டாட் பால்களை வீசியிருந்தார்.
தோனி கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துகளை சந்திப்பதற்கு திணறி வருகிறார். இது அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்த சூழ்நிலையில் நிச்சயமாக ரவி பிஷ்னோயை தோனி பேட்டிங் செய்யும்போது பயன்படுத்தி இருந்தால் அவர் ரன் குவிக்க முடியாமல் திணறி இருக்கலாம். ஆனால், ரிஷப் பண்ட் அதை செய்யவில்லை.
இதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அப்போது சிஎஸ்கே அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சிவம் துபேவும் ஆடுகளத்தில் இருந்தார். அவர் சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துகளை அதிரடியாக சிக்ஸர்களை அடிப்பார் என்பதால்தான் ரிஷப் பண்ட் ரவி பிஷ்னோயை பயன்படுத்தவில்லை என்ற ஒரு கருத்தும் இருக்கிறது.
ஆனால், இந்தப் போட்டியில் தோனி வரும் முன்பு சிவம் துபே பேட்டிங் செய்தபோது சுழற்பந்துவீச்சாளர்கள் தான் அதிக பந்துகளை வீசினார்கள். அப்போது துபே ரன் குவிக்க முடியாமல் திணறினார். அந்த வகையில் பார்த்தால் சிவம் துபே பெரிய பாதிப்பை ஏற்படுத்த மாட்டார் என்ற சூழ்நிலைதான் இருந்தது. இதற்கு முன் மற்ற அணிகள் எல்லாம் சிஎஸ்கே அணியின் கடைசி நான்கு ஓவர்களின் போது சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி அந்த அணியை கட்டுப்படுத்தி இருந்தன.
உதாரணத்திற்கு சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 வது ஓவரில் சுழற்பந்துவீச்சாளர் மகீஷ் தீக்ஷனாவை பயன்படுத்தியது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் 17 வது ஓவரில் கேப்டன் அக்சர் பட்டேல் பந்து வீசினார். பஞ்சாப் கிங்ஸ் அணி 17 வது ஓவரில் சாஹலை பயன்படுத்தியது. இப்படி மற்ற அணிகள் எல்லாம் சுழற்பந்துவீச்சாளர்களை 17 அல்லது 18வது ஓவர்களில் பயன்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரன் குவிக்க விடாமல் செய்துள்ளன.
அப்படி இருக்கும்போது ரிஷப் பண்ட் ரவி பிஷ்னோயின் மீதமிருந்த ஒரு ஓவரை பயன்படுத்தியிருக்கலாம். அது இந்த போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். மாறாக, வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும் பௌலிங் செய்ததால் 19.3 ஓவர்களில் 167 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.