சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் களம் இறங்கினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் களமிறங்கினர்.
அஸ்வின், நூர்அஹமத் மற்றும் ஜடேஜா ஆகியோர் தங்களுடைய அபாரமான திறனை வெளிப்படுத்தி மும்பை அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக அஸ்வின் சிஎஸ்கே அணிக்காக கடைசியாக 2015 ஆம் ஆண்டு விளையாடினார். அதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்பி இருக்கிறார்.

அஸ்வின் பந்து வீச வந்த உடனே சிஎஸ்கே ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த சூழலில் தன்னுடைய அனுபவ பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் தன்னுடைய முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அதுவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரரான வில் ஜாக்ஸ் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார்.
இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து அஸ்வின் தன்னுடைய ஓவர்களை கட்டுக்கோப்பாக பந்து வீசி முடித்தார். நான்கு ஓவர்கள் வீசிய அஸ்வின் 31 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். . அதேபோன்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணிக்காக அஸ்வினும் ஜடேஜாவும் கூட்டணி சேர்ந்து பந்து வீசினார்கள்.
ஜடேஜா ஓவரில் விக்கெட்டுகள் விழவில்லை என்றாலும் அவரும் கட்டுக்கோப்பாக பந்து வீசி மும்பைக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், 10 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே வாங்கிய நூர் அகமது தான் பட்டையை கிளப்பினார். நான்கு ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தடுமாறியது. அஸ்வின் 38 வயது ஆனாலும் களத்தில் பில்டிங்கில் அபாரமாக செயல்பட்டார். பொதுவாக சிஎஸ்கே அணிக்கு பந்துவீச்சு ஒரு அளவு பலவீனமாக காணப்பட்டது. ஆனால் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அபாரமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.