சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல்முறையாக விளையாடும் கலீல் அகமத் அபாரமாக பந்து வீசி அசத்தினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. இதனால் சூரியகுமார் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு பெரிய அளவில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. தீபக் சாஹரும் அண்மைக்காலமாக காயம் காரணமாக சரியாக விளையாடவில்லை.

தீபக் சாஹரும் வேறு அணிக்கு சென்ற நிலையில், சிஎஸ்கே அணி தற்போது கலீல் அகமதை மெகா ஏலத்தில் வாங்கியது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலில் அகமத் என்ன செய்யப் போகிறார் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தார்கள். இந்த தருணத்தில் கலீல் அகமத் அபாரமாக பந்து வீசி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
கலீல் அகமத்தின் பந்தை தொட முடியாமல் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் தடுமாறினர். குறிப்பாக முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடினார். இந்த தருணத்தில் ஆட்டத்தின் முதல் ஓவரில் நான்காவது பந்தில் ரோகித் சர்மா அடித்த ஷாட் ஒன்றை சிவம் துபே கேட்சாக பிடித்தார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
இதேபோன்று கலீல் அகமத் தன்னுடைய இரண்டாவது ஓவரிலும் அபாரமாக பந்து வீசினார். மும்பை இந்தியன்ஸ் அணியில் வெளிநாட்டு வீரரான ரியான் ரிக்கல்டன் அபாரமாக பேட்டிங் செய்து மூன்று பவுண்டரிகளை அடித்து அபாயகரமான வீரராக விளங்கினார். எனினும் கலீல் அகமத் அவருடைய விக்கெட்டையும் வீழ்த்தினார்.
தொடர்ந்து கலீல் அகமத் அபாரமாக செயல்பட்டார். இதனால் பவர் பிளே முடிவில் 3 ஓவர் வீசிய கலில் அகமத் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுமுனையில் சாம் கரன் ஒரு ஓவரில் 13 ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் கட்டுக்கோப்பாக பந்து வீசி சிஎஸ்கேவுக்கு இருந்த நீண்ட நாள் குறையை நிவர்த்தி செய்து இருக்கிறார்.