சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்று எனக்கு தெரியவில்லை. எனவே சீசன் போகப்போக ஆடுகளத்திற்கு தகுந்த மாதிரி எங்களை நாங்கள் மாற்றிக் கொள்வோம். இந்த போட்டிக்கான தயாரிப்பு பணி சிறப்பாக இருந்தது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பிறகு சில சர்வதேச வீரர்கள் எங்கள் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ஒருவர் அணிக்கு திரும்பி இருக்கிறார். நாங்கள் சென்னையில் தொடர்ந்து சில ஆண்டுகளாக விளையாடி வருகின்றோம். இன்றைய போட்டியில் நாங்கள் மூன்று வேக பந்துவீச்சாளர்கள், மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த போகிறோம் என்று ருதுராஜ் குறிப்பிட்டுள்ளார்.
நூர் அஹமத், ஆஸ்திரேலிய வீரர் நாதன் எலிஸ், ரச்சின் ரவீந்திரா மற்றும் சாம் கரன் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் பதிரானா, சிஎஸ்கே அணியில் முதல் போட்டியில் விளையாடாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
இதனை தொடர்ந்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ், நான் முதலில் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சி தான். நாங்கள் இந்த தொடருக்காக நல்ல முறையில் தயாராக இருக்கின்றோம்.
சென்னைக்கு இரண்டு மூன்று நாட்கள் முன்பே வந்து பயிற்சி செய்து வருகின்றோம். இந்த இரண்டு அணிகளுமே ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை செய்திருக்கிறது.
இன்றைய ஆட்டம் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என நம்புகிறேன். எங்கள் அணியில் ரியான் ரெகுல்டன், வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னர் மற்றும் டிரெண்ட் பவுல்ட் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்து இருக்கிறோம் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.