சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த சூழலில் சிஎஸ்கே அணி என்றாலே அது தோனி தான் என்ற ஒரு இமேஜ் உருவாகி இருக்கிறது.
ராஞ்சியில் தோனி பிறந்திருந்தாலும் தமிழ்நாடு ஈன்றெடுக்காத ஒரு பிள்ளையாகவே தோனி மாறிவிட்டார். இந்த சூழலில் ரசிகர்கள் தோனி மீது தான் அதிக அன்பில் இருப்பதாகவும், சிஎஸ்கே அணி மீது ரசிகர்களுக்கு பெரிய அளவு பாசம் இல்லை என்பது போலவும் ராயுடு பேசியிருப்பது விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

தோனியின் பேட்டிங்கை பார்க்க வேண்டும் என்பதற்காக சிஎஸ்கே வீரர்கள் ஆட்டம் இழந்தாலே அதனை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இதை குறிப்பிட்டு தான் ராயுடு இவ்வாறு பேசியிருக்கிறார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சென்னையில் வினோதமாக நடக்கும். இது விளையாட்டுக்கு நல்ல விஷயமாக நான் என்றுமே நினைத்தது கிடையாது.
நீங்கள் கிரிக்கெட்டுக்கு புது வீரராக களத்திற்கு வந்தால் நீங்கள் கொஞ்சம் பயப்படுவீர்கள். ஏனென்றால் மைதானத்தில் அவ்வளவு சத்தமாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவு அந்த அளவுக்கு இருக்கும். நீங்கள் களத்தில் விளையாடும்போது தான் உங்களுக்கு தெரிய வரும். இங்கு கூடி இருக்கும் அனைவரும் சிஎஸ்கே ரசிகர்கள் என்பதற்கு முன் தோனியின் ரசிகர்கள் என்பது அப்போதுதான் தெரிய வரும்.
இதை நானே கண்கூடாக பார்த்திருக்கின்றேன். ஏனென்றால் சிஎஸ்கே அணியே இப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு தல என்று சரியான பெயரை தான் வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் அணியில் என்ன நடக்க வேண்டும் என்பது குறித்து அவர் தான் முடிவு எடுப்பார். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அனைவரும் தோனியின் மீது பைத்தியம் போல் மாறிவிட்டார்கள்.
ஏனென்றால் அந்த அளவுக்கு அவர் சிஎஸ்கேவுக்காக பல விஷயங்களை செய்திருக்கிறார். இது கொஞ்சம் கொஞ்சமாக பலருக்கும் புரிந்து வருகிறது. தற்போது அணியில் இருக்கும் வீரர்களே இதனை உணர்ந்து வருகிறார்கள். நாங்களும் தான் தோனியை விரும்புகின்றோம். ரசிகர்களும் விரும்புகிறார்கள். ஆனால் தோனியை பார்க்க வேண்டும் என்பதற்காக சிஎஸ்கே வீரரை அவுட் ஆக வேண்டும் என்று நினைப்பது எல்லாம் என்னவென்று சொல்வது. இது விளையாட்டுக்கு நல்லது கிடையாது.
தோனியை போல் மற்ற வீரர்களும் அணிக்காக உழைக்கிறார்கள். சிஎஸ்கேவில் வெற்றிக்காக கடுமையான பணிகளை செய்து இருக்கிறார்கள். பல தியாகங்களையும் செய்திருக்கிறார்கள். ஆனால் ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொள்வது உண்மையில் ஏமாற்றத்தை தான் தரும். ரசிகர்கள் இதனை தவிர்க்க வேண்டும். இதை தோனி தான் ரசிகர்களுடன் வந்து சொல்ல வேண்டும். சிஎஸ்கே அணிக்காக விளையாடும் அனைவரும் நமது வீரர்கள் தான். அனைவருக்கும் உங்களது ஆதரவை கொடுங்கள் என்று சொல்ல வேண்டும் என்று ராயுடு கூறியுள்ளார்.