சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஆடுகளம் முற்றிலும் ரன் குவிப்புக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சூழலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இது சிஎஸ்கே ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான பிளமிங், சிஎஸ்கே அணி தோல்விக்கு ஆடுகளம் தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.

தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆடுகளத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்றும் சென்னையில் இருக்கும் ஆடுகளம் போல் இது செயல்படவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டி இருந்தார். பிளமிங்கின் இந்த பேச்சு கவனத்தை ஈர்த்து இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு அணியும் தங்கள் விளையாடும் சொந்த மைதானத்தில் எந்த மாதிரியான ஆடுகளத்தை தயாரிக்க வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தல்களை வழங்குவார்கள்.
அதற்கு ஏற்ற வகையில் ஆடுகளப் பராமரிப்பாளர்களும் செயல்படுவார்கள். இதனால் தான் ஒவ்வொரு அணியும் தங்களது சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடும். குறிப்பாக சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை தயாரித்து வெற்றி பெறும். நமது ஆடுகளம் இவ்வாறு தான் செயல்படும் என்பதை தெரிந்து அதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு அணியும் வீரர்களை தேர்வு செய்திருக்கும்.
இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் ஆடுகளப் பராமரிப்பு பணியை முற்றிலும் பிசிசிஐ, தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் தொடர் மேலும் பொழுதுபோக்குக்காக மாற வேண்டும் என்பதற்காக ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக அமைக்கப்படுகிறது. இதனால் பிசிசிஐ மைதான பராமரிப்பாளர்களை அழைத்து ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறது.
இதன் காரணமாக தான் சிஎஸ்கே வழக்கமான பயன்படுத்தப்படும் ஆடுகளங்கள் போல் இல்லாமல் புதிய ஆடுகளங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோன்று நேற்று ஆட்டத்தில் சேப்பாக்கத்தில் அதிகளவு ஆர் சி பி ரசிகர்கள் வந்திருந்தனர். இதற்கு காரணம் ஆர்.சி.பி அணியினர் தங்களுக்கு என்ன டிக்கெட்டுகளை வாங்கி அதனை அவர்களது ரசிகர்களிடம் வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே ரசிகர்களுக்கு போதுமான டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை எனும் தெரிகிறது.