ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே, ஆர்சிபி மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு பெருமளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இதில் ஒரு அணி மற்றொரு அணியை தோற்றால் முன்பெல்லாம் சாதாரண கேலி கிண்டல் மட்டும்தான் ரசிகர்களுக்குள் நடைபெறும். இந்த கேலி கிண்டலை பார்ப்பதற்கே அவ்வளவு ஜோராக இருக்கும்.
ஆனால் தற்போது நிலைமை கையை மீறி செல்கிறது. இந்த கேலி கிண்டல் தற்போது வன்மமாக மாறி வருவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா குற்றம் சாட்டி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் தற்போது சிஎஸ்கே, ஆர்சிபி ரசிகர்களுக்கு இடையே நடைபெறும் மோதல் மிகவும் கடுமையாக மாறி வருகிறது.

மைதானத்திற்கு வெளியே சிஎஸ்கே ரசிகர்களை ஆர்சிபி ரசிகர்கள் கேலி செய்து வருகிறார்கள். அதுவும் சிஎஸ்கே வீரர்கள் பேருந்தில் செல்லும் போது ஆர்சிபி ரசிகர்கள் அடாவடி செய்வது கண்டிக்கத்தக்கது. இதை நான் தவறான ஒரு விஷயமாக பார்க்கின்றேன்.மேலும் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மைதானத்திற்கு வெளியே சண்டை போடுகிறார்கள்.
சிஎஸ்கே பெண் ரசிகரை ஆர்சிபி ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவரை கேலி செய்கிறார்கள். இது அந்தப் பெண்ணின் பாதுகாப்பிற்கு பிரச்சனையாக மாறிவிடுகிறது. இது பெங்களூரில் மட்டுமல்ல சென்னையில் கடந்த ஆண்டும் இதே போல் ஒரு சம்பவம் நடைபெற்றது. ஆனால் இது எல்லாம் தேவையில்லாத ஒரு விஷயம். இதை யார் செய்தார்கள் என்பது பிரச்சனை இல்லை.
ஆனால் ஏன் செய்கிறீர்கள்? மோதல் நாளுக்கு நாள் கையை மீறி செல்கிறது. ஆர்சிபி ரசிகர்கள் சிஎஸ்கே வின் ஜெர்சி எனக் கூறி கைதி போல் உடை அணிந்து கொண்டு அதில் சிஎஸ்கே, தோனி என்று எழுதி வருகிறார்கள். சிஎஸ்கே இரண்டு ஆண்டுகள் தடைபட்டதை கிண்டல் செய்யும் விதமாக ஆர்சிபி ரசிகர்கள் இவ்வாறு ஜெர்சியை அணிந்து வருகிறார்கள்.
இது ஒரு விளையாட்டு என்பதை மறந்து விடாதீர்கள். தற்போது பார்க்கும் சம்பவங்கள் எல்லாம் விளையாட்டை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இது எனக்கு கவலை அளிக்கின்றது. இதை இரு அணி ரசிகர்களும் நிறுத்த வேண்டும் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் தொடங்கி முதல் முறையாக ஆர்சிபி அணியிடம் ஒரே சீசனில் இரண்டு முறை சிஎஸ்கே அணி தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.