சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு ஒரு மோசமான செய்தி காத்திருக்கிறது. சிஎஸ்கே அணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளர் மதிஷா பதிரானா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வியாழக்கிழமை அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது இது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், மதிஷா பதிரானா இன்னும் காயத்திலிருந்து மீண்டு வந்து கொண்டு இருக்கிறார் என்றார்.

மேலும், சிஎஸ்கே அணி வட்டாரத்தில் இது குறித்து விசாரித்த போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு முன் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வருவது கடினம் என்ற தகவல் வெளியானது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ள 2025 ஐபிஎல் தொடரின் எட்டாவது லீக் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பதிரானா விளையாடவில்லை என்றால், சிஎஸ்கே அணியில் வேகப்பந்துவீச்சாளர்களாக கலீல் அகமது மற்றும் நாதன் எல்லீஸ் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. சாம் கர்ரனும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றிருந்தது. அதை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்திக்க உள்ளது.
இந்த இரண்டு அணிகளும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பரபரப்பான கடைசி போட்டியில் மோதியது. அதன் முடிவில் சிஎஸ்கே வின் பிளே ஆஃப் வாய்ப்பை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பறித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு இந்த இரண்டு அணிகளும் சந்திக்கும் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செய்தி சுருக்கம்: