சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ஆர்.சி.பி அணியை தங்களது சொந்த மண்ணான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது.
கடந்த முறை சிஎஸ்கே அணி பெங்களூருவில் அடைந்த தோல்விக்கு பழித்தீர்க்கும் விதமாக சிஎஸ்கே அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. ஆர்சிபி அணி தற்போது புதிய கேப்டனான ரஜத் பட்டிதார் தலைமையில் களமிறங்கி முதல் போட்டியில் அபார வெற்றியை பெற்று இருக்கிறது. ஆர் சி பி அணியின் பேட்டிங் பலமாக இருப்பதால் சிஎஸ்கே சுழற் பந்துவீச்சாளர்கள் அவர்களை சமாளிப்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங், ஆர் சி பி அணியில் விராட் கோலியையும் ரஜத் பட்டிதாரையும் அமைதியாகிவிட்டால் சிஎஸ்கே வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆர் சி பி அணி விராட் கோலியை நம்பி தான் அதிகமாக இருக்கிறதா என்று கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு போட்டியை வைத்து எந்த ஒரு கருத்தையும் சொல்ல முடியாது.
இரண்டு அணிகளுமே கடந்த ஆண்டு விட தற்போது வித்தியாசமாக இருக்கிறது. எனினும் நாங்கள் கடந்த ஆண்டில் நடந்த முடிவுகளை வைத்து எந்த ஒரு நகர்வையும் செய்வதில்லை. ஆனால் ஆர் சி பி அணியின் மிகப்பெரிய வீரராக விராட் கோலி இருக்கிறார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
விராட் கோலியையும் ரஜத் பட்டிதாரையும் நாங்கள் அமைதியாகிவிட்டால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. விராட் கோலியை தவிர இம்முறை அவர்கள் பல பலமான வீரர்களை சேர்த்து இருக்கிறார்கள். ஆர் சி பி மட்டுமல்ல ஒட்டு மொத்த அணிகளும் தற்போது இப்படிதான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டுகளை விட இம்முறை தொடர் சரிசமமாக இருப்பதாக நான் நினைக்கின்றேன். பதிரானாவுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் நாளைய போட்டியில் பங்கேற்க மாட்டார்.ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் பெரிய அளவில் எங்கள் அணியில் மாற்றம் இருக்காது என்று பிளமிங் தெரிவித்துள்ளார்.