கவுகாத்தி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வெல்லும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனென்றால் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி மிகவும் மோசமாக விளையாடி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த சூழலில் சிஎஸ்கே அணி இன்று கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் சிஎஸ்கே அணியில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்து பேசி உள்ளார்.

அதில்," டாஸ் வென்ற பிறகு எதற்கு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்கிறீர்கள். முதலில் பேட்டிங் எடுத்து அதிரடியாக விளையாடுங்கள். அபாரமாக ரன் குவியுங்கள். எதைப் பற்றியும் கவலை இல்லாமல் அதிரடியாக ஆடினால் மட்டுமே ரன் கிடைக்கும். தற்போது இருக்கும் பேட்டிங் வரிசையை சிஎஸ்கே அணி கண்டிப்பாக முற்றிலும் மாற்ற வேண்டும்."
"கான்வே, ருதுராஜ் ஜோடி ஏற்கனவே தங்களுடைய திறமையை நிரூபித்து இருக்கிறது. இப்படி இருக்கும்போது அவர்களை ஏன் மாற்ற வேண்டும். மூன்றாவது வீரராக ரச்சின் ரவிந்திரா விளையாட வேண்டும். நான்காவது வீரராக சிவம் துபேவை களமிறக்குங்கள். ஐந்தாவது வீரராக ஜடேஜா ஆட வேண்டும். ஆறாவது வீரராக தோனி விளையாட வேண்டும். பேட்டிங் வரிசை இவ்வாறு இருந்தால் மட்டுமே சிஎஸ்கே அணி வெற்றி பெறும்."
"ராகுல் திருப்பாதி, தீபக் ஹூடா ஷாம்கரன் போன்ற வீரர்களை எல்லாம் பிளேயிங் லெவனில் சேர்க்காதீர்கள். தோனி பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் களமிறங்குவது மிகப்பெரிய தவறு. ஆர் சி பி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட இறுதி கட்டத்தில் அவர் நன்றாக விளையாடினார். அப்படி இருக்கும் போது அவர் குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழாவது வீரராக களத்திற்கு வர வேண்டும்."
"தோனியின் 2 சிக்சரை விட எனக்கு 2 புள்ளிகள் தான் முக்கியம். சாம் கரனை விட ஜடேஜா நல்ல பேட்ஸ்மேன் ஆக இருக்கும் போது ஜடேஜாவை ஏன் முன்னே பேட்டிங் செய்ய விடுவதில்லை. இதேபோன்று தன்னுடைய பந்துவீச்சு ஸ்டைலை அஸ்வின் மாற்ற வேண்டும். அஸ்வின் தான் ஒரு ஆப் ஸ்பின்னர் என்பதையும் மறந்துவிட்டு வெறும் கேரம் பந்தை வீசுகிறார். அவர் ஆப் ஸ்பின் வீசினால் மட்டுமே விக்கெட் கிடைக்கும்" என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.